மிரட்டும் டிட்வா புயல்.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில் லீவு? விவரம்
சென்னை: புயல் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல நாளை சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல கடலூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகியிருந்த புயல், தற்போது தமிழ்நாட்டை நோக்கி முன்னேறி வருகிறது. இலங்கையில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் சுமார் 56 பேர் பலியாகி இருக்கின்றனர். கடும் வெள்ளம் மற்றும் சூறாவளி காற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் நாளை புயல் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து, நேற்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், துறை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.
நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், சில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. விடுமுறை என்பதால் நாளை சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்றும், தனது உத்தரவில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
பள்ளிகளைப் போல, கல்லூரிகளுக்கு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்காலில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலையார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வுகள், வேறு தேதியில் நடைபெறும் என்றும், மாற்று தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications