மாநகராட்சியானது ஓசூர், நாகர்கோவில்... ஒரே நாளில் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்
சென்னை: ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான மசோதா சட்டசபையில் இன்று நிறைவேறியது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் இனி தமிழத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ. 1 லட்சம் வரையில் அபராதம் விதிக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டது. இந்த மசோதாவும் இன்று நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி வழங்கும் மசோதா உள்பட மொத்தம் 8 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று சட்டசபையில் நிறைவேறியது. பிப்ரவரி 8 ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.