இன்னும் சில மணி நேரம் தான்.. தெறிக்குது கவுண்ட்-டவுன்.. மீண்டும் சொல்லி அடிக்குமா திமுக?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கவுண்ட் டவுன் திரை அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கவுண்டவுன், திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வதற்கு இன்னும் சில மணி நேரங்களே காட்டுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 62 மையங்களில் நாளை நடத்தப்படுகிறது. சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் திமுகவினர் மிகுந்த உற்சாகமாக காணப்படுகின்றனர்.

அண்ணா அறிவாலயத்தின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரிய டிஜிட்டல் திரையில், ஸ்டாலின் படத்துடன் "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்", "திராவிட மாடல் 2.0" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது வெறும் தேர்தல் பிரச்சார வாசகம் மட்டுமல்லாமல், 'திராவிட மாடல்' ஆட்சியின் அடுத்த கட்டத்தை (Version 2.0) நோக்கிய பயணமாகக் கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஏற்கனவே பல மேடைகளில் "234 க்கு 234 தொகுதிகளையும் வெல்வதே நமது இலக்கு" என்று கூறியு வந்த நிலையில், அந்த இலக்கை நோக்கிய பயணத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் வகையில் கவுண்டவுன் திரை கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பே அமைக்கப்பட்டது.
இந்த கவுண்ட்-டவுன் திரையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான நாளையை (மே 4, 2026) நோக்கிய நேரக் கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகக்கூடிய பகல் 12 மணிக்கு இன்னும் எத்தனை மணி நேரங்கள், நிமிடங்கள் மற்றும் நொடிகள் மீதமுள்ளன என்பதைக் காட்டுகிறது இந்த 'கவுண்ட்டவுன்'.
அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தரும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் இந்தத் திரையைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். சிலர் இந்தத் திரையின் முன்னே நின்று செல்க்ஃபி மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கு இன்னும் சில மணி நேரங்களே காட்டுகிறது திமுகவின் கவுண்டவுன். அண்ணா அறிவாலயத்தில் கவுண்டவுன் திரை வைப்பது இது முதல்முறையல்ல. கடந்த தேர்தலின் போதும் இதுபோன்று அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போதும், திமுக சொல்லி அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளவும், கட்சி நிர்வாகிகள் வார் ரூமை அணுகலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகிகள் 080694 46900 என்ற எண் மூலம் வார் ரூமை தொடர்பு கொள்ளலாம் என திமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. களத்தில் நிலவும் பிரச்சனைகள், சந்தேகங்கள் தொடர்பாக 080694 46900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications