வீடு வாங்கறீங்களா.. "இந்த" கட்டிடங்களுக்கு அனுமதி கிடையாதாமே.. சீல் வைக்கப்படும்.. தமிழக அரசு அதிரடி
சென்னை,:''அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்ய, மேலும் ஆறு மாதம் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது,'' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ...
கட்டுமான தொழிலாளர்களுக்கான நலன்களில் தமிழக அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. சமீபத்தில் தொழிலாளர் ஆணையம் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தது.

கட்டுமான தொழிலாளர்கள்: குறிப்பாக, கட்டுமான தொழிலாளர்கள் (வெளிமாநில தொழிலாளர்கள் உள்பட) பணியிடத்தில் விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது உடலை அந்த தொழிலாளியின் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல நிதியுதவி அளிக்கப்படும், தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று கூறியிருந்தது.
அதுமட்டுமல்ல, கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய்பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்பது உட்பட பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.
முத்துசாமி பேட்டி: இந்நிலையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம்தான் இது: "கட்டிடம் நிறைவு சான்றிதழ் கொடுப்பதில் பல பிரச்னைகள் இருந்தன. அவற்றை ஒழுங்குபடுத்தியுள்ளோம்.. இப்போது, 12 மீட்டர் உயரம் வரை, கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை, 13 அல்லது, 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ள நிலையில், அதுகுறித்தும் ஏற்பாடு செய்துள்ளோம்.
மதுரை, திருவண்ணாமலை: மதுரை, திருவண்ணாமலை போன்ற கோவில் நகரங்களில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில், தொடர் கட்டுமானம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், தொடர் கட்டுமானம் தொடர்பாக, சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.. தமிழகம் முழுவதும் பல இடங்களில், இது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் கட்டிட அனுமதி வழங்க, சில விதிமுறைகளை பின்பற்றி, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கி வந்தன.
உள்ளாட்சி அமைப்புகள்: 2019ல் ஒருங்கிணைந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அப்போது, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கும் நடைமுடை கைவிடப்பட்டது.. இதனால், தொடர் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது அதை அனுமதிக்க வேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்தோம். எங்கு அவசியம் உள்ளதோ, அங்கு தொடர் கட்டிட அனுமதி கொடுக்க வேண்டும். அந்த அவசியத்தை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தொடர் கட்டிட அனுமதி பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியிருக்கிறார்.. நாகர்கோவிலில் மட்டுமல்ல, பல நகரங்களில் இந்த பிரச்சனை உள்ளது. அதற்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. எந்தெந்த இடங்களில், தொடர் கட்டுமானங்கள் தேவை என்பது குறித்த ஆய்வை, உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்து வருகின்றன...
சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விரைவில், இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கட்டிடம் கட்டும்போது, அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று கட்ட வேண்டும். முன் அனுமதி பெறாமல், யாரும் கட்டிடம் கட்ட வேண்டாம். முன் அனுமதி பெறாமல், கட்டிடம் நிறைவு சான்றிதழ் பெற முடியாது. அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்.
வாய்ப்பு: கடந்த, 2016க்கு முன் போடப்பட்ட மனைப் பிரிவுகள், அங்கீகாரம் பெறாமல் இருந்தால், அங்கீகாரம் பெற வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்கான அவகாசத்தை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர் நிலை புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு, அனுமதி வழங்கப்படாது" என்றார்.












Click it and Unblock the Notifications