ஐ பெரியசாமிக்கு சிக்கல்? வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் நோட்டீஸ்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு
சென்னை: வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அந்த வழக்கை மீண்டும் மறுஆய்வு செய்து விசாரித்து வந்த நிலையில் நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவர் ஐ பெரியசாமி. இவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் முதல் அமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

முன்னதாக இவர் கடந்த 2006 -2011 வரை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான குற்றச்சாட்டில் அதிமுக ஆட்சியில் ஐ பெரியசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2012ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. இதற்கிடையே தான் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஐ பெரியசாமி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கடந்த மார்ச் மாதம் விடுவித்தது. இதனால் ஐ பெரியசாமி நிம்மதியடைந்தார். இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ஐ பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை கையில் எடுத்தார். இந்த வழக்கை மறுஆய்வு செய்வதாக அறிவித்தார்.
இதனால் மீண்டும் இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. அதோடு ஐ பெரியசாமி பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே தான் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் சுழற்சி முறையில் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தொடர்பாக எந்த நோட்டீசும் வழங்கவில்லை என கூறினார். இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஐ பெரியசாமியின் சென்னை இல்லம் மற்றும் திண்டுக்கல் இல்ல முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையையும் நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications