Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லவ் ஜிகாத்.. சபரிமலை தங்கம்! பீகார் மாடலை கேரளாவில் புகுத்திய பாஜக! சேட்டன்களை வளைத்தது இப்படி தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள் உள்ளிட்டவற்றுக்காக நடைபெற்ற இந்த தேர்தலில் ஆளும் எல்டிஎப் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. எழுச்சி பெற்றிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப்.

ஆனால் இதையெல்லாம் விட திருவனந்தபுரம் மாநகராட்சியையும், இரண்டு நகராட்சிகளையும் மட்டுமே கைப்பற்றி இருந்தாலும் பாஜகவின் வெற்றி கேரளாவை தாண்டி இந்தியா முழுவதும் பேசும் பொருளாகி இருக்கிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக கேரளாவில் கால் பதிக்க முடியாமல் இருந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற இந்த வெற்றியை கேரள அரசியலின் திருப்புமுனை என்கிற பிரதமர் நரேந்திர மோடி. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது எப்படி? யூடிஎஃப், எல்டிஎஃப்-க்கு பின்னடைவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்..

BJP Kerala Local Body Election

கேரளா உள்ளாட்சித் தேர்தல்

கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், மாநில அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடைபெற்ற இந்த தேர்தலில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) குறிப்பிடத்தக்க எழுச்சியை பதிவு செய்துள்ளது.

பாஜக கேரளா வெற்றி

ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் அனைத்தையும் விட அதிகமாக பேசப்படுவது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) வெற்றிதான். திருவனந்தபுரம் மாநகராட்சி மற்றும் இரண்டு நகராட்சிகளை மட்டுமே பாஜக கைப்பற்றியிருந்தாலும், அந்த வெற்றி கேரள எல்லைகளை தாண்டி இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கேரள அரசியலில் நிலைநிறுத்த முடியாமல் போராடிய பாஜக, இந்த வெற்றியை ஒரு வரலாற்று திருப்புமுனை என பிரதமர் நரேந்திர மோடியே வர்ணித்துள்ளார்.

கேரள அரசியல் திருப்புமுனை

கேரளாவில் 6 மாநகராட்சிகள், 14 மாவட்டப் பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள், 152 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 941 கிராமப் பஞ்சாயத்துகளில், டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி வெளியானது. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மாநில அரசியல் களத்தில் கணக்குகள் முற்றிலும் மாறத் தொடங்கின.

எல்டிஎஃப் கடும் சரிவு

தேர்தல் முடிவுகளின்படி, யுடிஎஃப் கொல்லம், கொச்சி, திருச்சூர், கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகள், 7 மாவட்டப் பஞ்சாயத்துகள், 54 நகராட்சிகள், 79 ஒன்றிய பஞ்சாயத்துகள் மற்றும் 505 கிராமப் பஞ்சாயத்துகளை கைப்பற்றி, இந்த தேர்தலில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு நேர்மாறாக, ஆளும் எல்டிஎஃப் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2020 உள்ளாட்சித் தேர்தலில் 5 மாநகராட்சிகளை வென்றிருந்த எல்டிஎஃப், இம்முறை கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. மாவட்ட மற்றும் கீழ்மட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும் அதன் ஆதிக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக

இதற்கிடையில், பாஜக தலைமையிலான என்டிஏ திருவனந்தபுரம் மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள் மற்றும் 26 கிராமப் பஞ்சாயத்துகளை கைப்பற்றியுள்ளது. எண்ணிக்கையில் பார்க்கும் போது இது பெரிய வெற்றியாக தோன்றாவிட்டாலும், திருவனந்தபுரம் மாநகராட்சி கைப்பற்றப்பட்டதன் அரசியல் முக்கியத்துவம் மிகப் பெரிதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த 45 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியின் கோட்டையாகவே இருந்து வந்தது.

பாஜக தலைமை

அந்த கோட்டையை முதல் முறையாக பாஜக கைப்பற்றி, புதிய அரசியல் வரலாற்றை உருவாக்கியுள்ளது. இதை, கேரளாவில் எதிர்கால வெற்றிகளுக்கான தொடக்கப் புள்ளியாக பாஜக தலைமை பார்க்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 101 வார்டுகள் உள்ளன. இதில் 50 வார்டுகளில் பாஜக தலைமையிலான என்டிஏ வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 29 வார்டுகளும், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப்-க்கு 19 வார்டுகளும் கிடைத்துள்ளன. 2 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 34 வார்டுகளில் மட்டுமே வென்றிருந்த பாஜக, இம்முறை அந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தியுள்ளது.

பாஜக தேர்தல் உத்தி

இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால், பாஜக மேற்கொண்ட நவீன தேர்தல் உத்திகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தி, மக்களுக்குப் பாந்தமான வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆன்லைன் பிரச்சாரங்கள், நகர்ப்புற வாக்காளர்களை பெரிதும் ஈர்த்ததாக கூறப்படுகிறது. யுடிஎஃப், எல்டிஎஃப் ஆகிய இரு கூட்டணிகளையும் "ஊழலின் கூடாரம்" என விமர்சித்த பாஜக, உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் சேவை குறைபாடு, நிர்வாக செயல்திறன் இல்லாமை ஆகியவற்றை தன் பிரதான பிரச்சார ஆயுதமாக கையில் எடுத்தது.

லவ் ஜிஹாத்

அதே நேரத்தில், முன்பு பல தேர்தல்களில் பயன்படுத்திய 'லவ் ஜிஹாத்' போன்ற பிரித்தாளும் அரசியல் பிரச்சாரங்களை இந்த தேர்தலில் முழுமையாக தவிர்த்தது. இந்த அணுகுமுறையே திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், பாஜக தனது பிரச்சாரத்தில் தெற்கு மற்றும் மத்திய கேரளாவுக்கு கூடுதல் கவனம் செலுத்தியது. இந்த பகுதிகள் இந்துக்கள் வாக்கு பலம் கொண்ட பகுதிகளாக இருப்பதால், அங்கு தனது பிரச்சார ஆற்றலை முழுவதுமாக செலுத்தியது.

இந்துக்களின் வாக்கு

இந்த உத்தி, திருவனந்தபுரத்தில் முழுமையாக ஒர்க் அவுட் ஆனதாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் பாலக்காடு, திருச்சூர் போன்ற பகுதிகளிலும் நகர்ப்புற இந்துக்களின் வாக்குகளை பாஜக கணிசமாக அறுவடை செய்துள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில், திருச்சூரில் இருந்து சுரேஷ் கோபி வெற்றி பெற்றதும், இதே அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி

இந்த சூழ்நிலையில், "எல்டிஎஃப், யுடிஎஃப் மீது மக்கள் சலிப்படைந்துவிட்டார்களா?" என்ற பிரதமர் மோடியின் கருத்து, ஓரளவுக்கு சரிதானோ என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பாக, ஆளும் எல்டிஎஃப் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சிபிஎம், தேர்தலுக்கு முன்னரே ஒருவித "மிதமான இந்துத்துவ" அரசியலை கையில் எடுத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. அதன் விளைவாக, வடக்கு கேரளத்தில் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற பகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களிடையே அதிருப்தி அதிகரித்ததாக கூறப்படுகிறது.

முஸ்லிம் வாக்காளர்கள்

வடக்குப் பகுதி இந்துக்கள் பெருமளவில் பாஜக பக்கம் சாய்ந்த நிலையில், முஸ்லிம் வாக்குகள் யுடிஎஃப்-க்கா அல்லது தங்களுக்கு வருமா என்ற குழப்பத்தில் தான் எல்டிஎஃப் தேர்தலை சந்தித்தது. எதிர்பார்த்ததுபோலவே, மலப்புரத்தில் உள்ள 12 நகராட்சிகளில் 11-ஐ யுடிஎஃப் கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணமாக, இடதுசாரிகள் மீதான மதச்சார்பின்மை அடையாளம் சரிந்ததே என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

முதல்வர் பினராயி விஜயன்

முதல்வர் பினராயி விஜயன், யுடிஎஃப்-இன் முஸ்லிம் வாக்கு வங்கியை குறிவைத்து 'லீக் அலயன்ஸ்' என விமர்சித்தது, முஸ்லிம் சமூகத்தில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதேபோல், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஆரம்பத்தில் அரசு ஏற்றுக்கொண்டதும், அதிருப்தியை அதிகரித்தது. குளோபல் ஐயப்பா சங்கமம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும், எதிர்பார்த்த ஆதாயத்திற்கு பதிலாக அரசுக்கு பேக் ஃபயர் ஆனதாகவே பார்க்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த தங்க திருட்டு சம்பவம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்த சங்கமம் முன்னெடுப்பு சந்தர்ப்பவாத அரசியலாக பார்க்கப்பட்டதும், முஸ்லிம் வாக்காளர்களை மேலும் விலகச் செய்தது. இதன் விளைவாக, தங்களை ஒரு நம்பகமான மதச்சார்பற்ற மாற்றாக காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் முன்வந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

பாஜக எழுச்சி

மொத்தத்தில், இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், கேரள அரசியலில் மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் கணக்குகளிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம் மாநகராட்சி வெற்றி, பாஜக கேரளாவில் இனி ஒரு சாதாரணமான கட்சி அல்ல என்பதை உணர்த்தும் எனவே பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+