ஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்
சென்னை: நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன், பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் ரகுராம் ராஜன் என திமுக மும்முனை அஸ்திரங்களுடன் தமிழ்நாட்டின் பொருளாதார முகத்தை திருத்தியமைக்க களம் குதித்திருப்பது அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பொருளாதார, நிதி விவகாரங்களில் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசிற்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்தார்.
மத்திய அரசின் பொருளாதார கொள்கை தவறு என்றும் சுட்டிக் காட்டி வருகிறார். பிடிஆரின் சரமாரி கேள்விகள் இந்திய அளவில் வைரலாகின. இந்த நிலையில்தான் அடுத்த அஸ்திரத்தை திமுக கையில் எடுத்தது. மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனை தமிழக அரசு நியமித்தது.

கொரோனா காலம்
இவர் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியா மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது என கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் எச்சரித்திருந்தார். மத்திய அரசை புள்ளி விவரங்களுடன் கடுமையாக விமர்சிப்பதில் வல்லவர் ஜெயரஞ்சன்.

சர்வதேச நிறுவனங்கள்
இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ரகுராம் ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவசாலியான இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆர்பிஐ கவர்னராக இருந்தவர். இவர் தலைமையில் தமிழகத்திற்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திறமைசாலிகள்
பிடிஆர் முதல் ரகுராம்ராஜன் வரை ஸ்டாலினின் தேர்வு அனைத்தும் சூப்பர் டூப்பர் என மக்கள் மத்தியில் ஆர்ப்பரிக்கப்படுகிறது. இந்த மூன்று பேருமே மிகவும் திறமைசாலிகள். இவர்களை முக்கிய பதவிகளுக்கு ஸ்டாலின் தட்டித் தூக்கியதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பொருளாதாரம் குறித்த பாடத்தை இவர்கள் கற்பிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. 3 மிகப் பெரிய அஸ்திரங்கள் மத்திய அரசுக்கு உண்மையில் சவாலானவைதான்.

பொருளாதாரத்தில் கவனம்
ஆர்பிஐ கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பொருளாதார கொள்கைகள், வழிகாட்டுதல்களை மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பொருளாதார வளர்ச்சிக்கு மோடி அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ரகுராம் ராஜனை தமிழக அரசு தட்டித் தூக்கி வந்துள்ளது மத்திய அரசுக்கு விடப்படும் சவால்தான். இந்த 3 பேரை தமிழக வளர்ச்சிக்கு ஸ்டாலின் பயன்படுத்துவது மிகவும் பாராட்டுதலுக்குரிய விஷயமாகும். அதே வேளையில் இவர்கள் மூவரையும் நியமித்தது பாஜக அரசுக்கு எதிராக ஸ்டாலின் அரசின் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications