ஸ்டாலின் தோற்றாலும்.. சென்னையில் உதயநிதி -சேகர்பாபு மட்டும் வென்றது எப்படி? தவெக சறுக்கலின் பின்னணி
சென்னை: சென்னையில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில 14 தொகுதிகளில் தவெக அமோக வெற்றி பெற்றுள்ளது. கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டுள்ளார். திமுகவில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகத்தில் சேகர்பாபுவும் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் இருவரும் வென்றது எப்படி? அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை திமுகவின் கோட்டையாகும். இங்கு மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் சென்னையின் திமுக கோட்டையை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இடித்து சிதைத்துள்ளது. ஏனென்றால் 16ல் 14 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வீழ்த்தப்பட்டுள்ளார். அவரை தவெகவின் விஎஸ் பாபு வீழ்த்தினார். முதல்வர் ஸ்டாலின் தோற்பார் என்று யாரும் நினைக்காத நிலையில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு அவரை வீழ்த்தி உள்ளார்.
உதயநிதி - சேகர்பாபு மட்டும் வெற்றி
சென்னையில் 2 தொகுதிகளில் மட்டுமே போராடி திமுக வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒன்று சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியாகும். இந்த தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். உதயநிதி ஸ்டாலின் தவெகவின் செல்வத்தை வீழ்த்தினார். அதேபோல் இன்னொரு தொகுதி துறைமுகம் ஆகும். இந்த தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளார். அவர் தவெக வேட்பாளர் சினோரா அசோக்கை வீழ்த்தி வாகை சூடினார்.
தவெக அலையில் தப்பியது எப்படி?
மொத்த சென்னை தொகுதியிலும் தவெக அலை வீசிய நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மற்றும் துறைமுகத்தில் மட்டும் எப்படி உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு வென்றனர்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் இந்த 2 தொகுதிகளிலும் தான் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் திமுகவின் வாக்கு வங்கியாக உள்ளனர். ஆனால் இந்த முறை விஜய் கிறிஸ்தவர் என்பதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் தவெகவினர் பக்கம் சென்றனர். குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள், தாய்மார்கள் தவெக பக்கம் சாய்ந்தனர். மாறாக இஸ்லாமியர்கள் திமுகவின் பக்கமே நின்றுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்லாமியர்கள் ஓட்டுகள்
இதுதான் சென்னையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோரின் வெற்றிக்கு காரணமாகும். அதாவது, சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் ஆவார்கள். அதேபோல் துறைமுகம் தொகுதியில் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இந்த 2 தொகுதிகளிலும் இஸ்லாமியர்களின் வாக்குகள் தான் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் தான் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகத்தில் சேகர்பாபுவும் வென்று இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
பிற தொகுதிகளின் நிலவரம்
அதேவேளையில் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் சுமார் 18% - 22%. சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். ஆனால் விஜய் நேரடியாக களமிறங்கியதால் அங்கு ரிசல்ட் மாறிவிட்டது. இதுதவிர ஆயிரம் விளக்கில் சுமார் 15% - 20%, எழும்பூர் (தனி) தொகுதியில் சுமார் 12% - 15%,
வில்லிவாக்கம் தொகுதியில் சுமார் 10% - 12% பேர், சைதாப்பேட்டை சுமார் 10% வரை இஸ்லாமியர்கள் உள்ளனர். இங்கு மற்ற மதம், வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, இளைஞர்களின் ஓட்டுகளை வைத்து தவெகவினர் வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications