Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1967இல் திமுக வென்றது எப்படி? காங்கிரஸ் தோற்றது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1958 மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை தனது கட்சி சின்னமான உதயசூரியனை இழந்துவிடாமல் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றும் முதல் பொதுத்தேர்தல் 1952ஆம் ஆண்டு நடைபெற்றபோது திமுக தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்து இருந்தது. 1949 செப்டம்பர் 17 ஆம் தேதி அண்ணாதுரை திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, தனது கட்சியில் 'திராவிடர்' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் 'திராவிட' என்ற சொல்லையே மிகக் கவனமாகப் பயன்படுத்தினார். அவர் 'ர்' என்ற ஒரு எழுத்தைத் தவிர்த்ததன் மூலம், மிகப்பெரிய ஒரு கொள்கை மாற்றத்தை தன் தொண்டர்களுக்கு உணர்த்தினார்.

DMK

அண்ணாவின் சொல் மாற்றம்:

'திராவிடர்' என்ற சொல் 'ஆரியர்' என்ற எதிர் துருவ அரசியலின் அடையாளமாகப் பெரியார் ஈ.வெ.ராமசாமியால் முன்வைக்கப்பட்டது. ஆரிய எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, காந்தி எதிர்ப்பு ஆகியவை பெரியாரின் பிரதான கொள்கையாக இருந்தன.

ஆனால், அண்ணாதுரை 'திராவிடர்' என்ற இன அடையாளத்தை முன்வைக்காமல் 'திராவிட' என்ற நில அடையாளத்தையே தேர்வு செய்து கட்சிக்குப் பெயர் சூட்டினார். ஆந்திரா, கேரளா, கர்நாடக, தமிழ்நாடு ஆகிய நிலப் பகுதிகளில் வாழும் மக்களின் பிரதிநிதியாகக் கட்சியை இவர் கட்டமைத்தார். அதன் ஒரு பகுதியாகவே 'திராவிட நாடு' கொள்கையைக் கட்சியின் பிரதான முழக்கமாக முன்வைத்தார்.

திமுக உருவானபோது பெரியார் இந்தக் கட்சியை ஒரு அரசியல் கட்சியாகவே அங்கீகரிக்கமாட்டேன் என்றார். பெரியாருக்கு ஆட்சி, அதிகாரம் பற்றி பெரிய கனவுகள் இல்லை. அவர் சமூக சீர்திருத்தமே முதல் விடுதலை எனக் கருதினார்.

அதன் அடையாளமாகத்தான் 1952இல் வெளியான 'பராசக்தி' படத்தில் நடிகை பண்டரிபாய், "எங்கள் தந்தை ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன? என்று நினைப்பவர். எங்கள் அண்ணா அப்படி அல்ல. புது வழியில் பயணிப்பவர்" என வசனம் எழுதி இருந்தார் மு.கருணாநிதி. இவர் மறைமுகமாகப் பெரியாரின் நிலைப்பாட்டை விமர்சித்திருந்தார். ஏனென்றால், அப்போது பெரியாரிடமிருந்து திமுக விலகி நின்றது.

முதன்முதல் பிரிவைக் குரல்

1952ல் நாடு முதல் தேர்தலைச் சந்தித்த போது, 'திராவிட நாடு' கொள்கையை ஆதரிப்பவர்களை திமுக ஆதரிக்கும் என அண்ணாதுரை அறிவித்தார். இந்தியாவிலேயே பிரிவினை குரல் முதன்முதலாக ஒலித்த மாநிலம் தமிழ்நாடுதான். அதாவது அன்றைய பிரசிடென்சி மாநிலம். 1938இல் 'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) இதனை முன்வைத்தது. ஆனால், நாடு விடுதலைப் பெற்ற பின்னர் காஷ்மீருக்கும் நாகாலாந்துக்கும் கிடைத்த ஆதரவு திராவிட இயக்கக் கோரிகைக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மையான வரலாறு.

நீதிக்கட்சியின் நீட்சியாக அண்ணாதுரை 'திராவிட நாடு' கோரிக்கையைக் கையில் எடுத்தார். 1948ல் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு மொழிவாரியான மாநில பிரிவினை என்பது தலைதூக்க ஆரம்பித்தது. தேசிய உணர்ச்சியிலிருந்து மக்கள் மெல்ல நகர்ந்து மாநில உரிமைக்கும் தாய் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர்.

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த காந்தி, தேசிய மொழியாக இந்தியை முன்னிலைப்படுத்தினார். நாடு முழுவதும் தன் தொண்டர்களை இந்தி படிக்க அறிவுறுத்தி, பிரச்சார சபாக்களை உருவாக்கத் தூண்டினார். அப்படித்தான் தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபை உருவானது. அதைத் தொடங்கி வைக்கக் காந்தியே வருகை தந்தார்.

ஆனால், அவர் மறைவுக்குப் பிறகு மாநில உணர்வைத் தூண்டக் கூடிய கருத்தியல் வலுப்பெற ஆரம்பித்தன. காங்கிரஸ் 1937 முதல் 39 வரையும் அடுத்து 1946 முதல் 47 வரை தமிழகத்தை ஆண்டது. அப்போது வாக்குரிமை வரி செலுத்துபவர்கள், படித்த பட்டதாரிகள் போன்ற மேட்டுக்குடிகளிடம் மட்டுமே இருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் வாக்குரிமை என்பது இல்லை.

தொழில் ரீதியாக மாநிலம் தேசிய அளவில் இரண்டாவது இடத்திலிருந்தது. நகரமயமாக்கலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருந்தது. ஆனால், இந்தி மொழியைத் திணிக்கும் போக்கு மக்களின் மனநிலைக்கு எதிராக இருந்தது. ராஜாஜி அதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

ராஜாஜி Vs காமராஜ்

மீண்டும் ராஜாஜி 1952 பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக ஆட்சி நாற்காலியில் அமர்ந்தார். அவரை மேலவை உறுப்பினராகக் குமாரசாமி ராஜா பரிந்துரைத்ததால் பதவியில் அமர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் நாட்டில் அரிசி பஞ்சம் அதிகரித்தது. சில ஆண்டுகளாக மழை பொழிவு இல்லை. வறட்சி வாட்டி வதைத்தது. விளைச்சல் இல்லை. நெசவாளர்கள் வறுமையில் வாடினர்.

ராஜாஜிக்கும் காமராஜுக்கும் கட்சிக்குள் மோதல் போக்கும் உண்டானது. ராஜாஜி கொண்டுவந்த அரசு ஊழியர் சம்பளம் பிடிப்பு, பாதி வேளை பள்ளிப் படிப்பு ஆகிய திட்டங்களுக்குக் கட்சிக்குள்ளாகவே எதிர்ப்பு மேலோங்கியது. ராஜாஜிக்கும் காமராஜுக்குமான உட்கட்சி பூசல் 1942லேயே தொடங்கியது. ராஜாஜியைக் காந்தி ஆதரித்தர். மக்கள் காமராஜை ஆதரித்தனர்.

ராஜாஜியின் இந்தி எதிர்ப்பை, பாதி நேரமாகப் பள்ளி நேரக் குறைப்பை திமுக மூர்க்கமாக எதிர்த்தது. 'குலக் கல்வித் திட்டம்' என விமர்சித்தது. 'ஆச்சாரியார்' என்ற அடையாளத்தை முன்வைத்து அரசியலைக் கூர் செய்தது. கல்லக்குடிப் போராட்டம், நேருவுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், நெசவாளருக்கு ஆதரவாகப் போராட்டம் எனத் தீவிரம் காட்டியது திமுக.

ராஜாஜியால், உட்கட்சிக்கு நிலவும் காமராஜர் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை. கூடவே அண்ணாதுரையின் தம்பிகளின் கூட்டத்தையும் எதிர்கொள்ள முடியவில்லை. அவர் திணறினார். காங்கிரஸ் மேட்டுக்குடியினரின் மாளிகையாக இருந்தது. பொறுப்புகளில் உயர்குடியைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் அதிகம் இருந்தனர். காமராஜைப்போல் சில எளிய தலைவர்கள் மட்டுமே இருந்தனர்.

ஆனால், திமுக உருவானதே எளிய மக்கள் வாழக்கூடிய ராயபுரம் பகுதியில்தான். மீனவர்கள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான இப்பகுதியில் திமுக காலூன்றியது. அடித்தட்டு மக்களிடம் கட்சி மிகவேகமாகச் செல்வாக்குப் பெற்றது. அதை உணர்ந்தே தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டில் திமுக மாற்றம் கண்டது.

வாக்குறுதி செய்த வாக்கு மாற்றம்

இதை அனைத்தையும் மனதில் கொண்டு அண்ணாதுரை 'ரூபாய்க்கு 3படி அரிசி என்பது லட்சியம். ஒரு பாடி நிச்சயம்' என்றார் (அந்தத் திட்டத்தை அண்ணாதுரையால் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது வேறு விசயம்). தமிழ் மொழிக்கும் மாநிலத்திற்குச் சுயாட்சிக்கும் முக்கியத்துவம் அளித்து மேடைகள் தோறும் முழங்கினார். ராஜாஜி, பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் என அதற்கு முன் மாநிலத்தை ஆண்டவர்கள் அனைவரும் மேட்டுக்குடியினர். அண்ணாதுரை சாதாரண நெசவாளர் குடும்ப பின்னணியைக் கொண்டவர். அவர் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. இந்த எளிய பின்புலம் அவரை வேறுபடுத்திக் காட்டியது. 1952இல் காங்கிரஸ் பெற்ற வாக்குச் சதவீதம் 35.0% ஆகும். 1967இல் இக்கட்சி 41.4% பெற்றது. அதே திுக 1957இல் 12.8% வாக்குப் பெற்றது. அதே 1967இல் 40.6% வாக்குகளைப் பெற்றது. இது வெறும் வாக்கு மாற்றம் அல்ல. மகத்தான தத்துவ மாற்றம்.

அன்று அண்ணாதுரை நேரு எதிர்ப்பின் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்றார். இந்தியாவில் ஆட்சியைப் பிடித்த முதல் கட்சி திமுக என்ற சாதனையை நிகழ்த்தினார். இன்றைய முதல்வர் ஸ்டாலின் அதே பாணியில் பிரதமர் மோடி எதிர்ப்பு என்ற வழியில் முன்னோக்கிக் கொண்டு செல்கிறார். திமுகவின் வெற்றிப் பட்டில் வளர்ந்துகொண்டே செல்கிறது.

அது தொடருமா? 2026இல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா? காலம்தான் அதற்கு விடை சொல்ல வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+