முன்மொழிவோரின் கையெழுத்து இல்லை.. பாமக மனுவை ஏற்க மறுப்பு.. கடைசி நிமிட திகில்!
சென்னை: பூந்தமல்லி(தனி) தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரின் வேட்பு மனு முன்மொழிவோரின் கையெழுத்து இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டது. கடைசி 2 நிமிடத்தில் கையெழுத்து வாங்கி தாக்கல் செய்து நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடந்தது. இதுவரை நான்கு நாளில் 2065 பேர் 234 தொகுதிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை(19ம் தேதி) கடைசி நாளாகும்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோரை அந்த தொகுதியைச் சார்ந்த ஆறு பேர் முன்மொழிந்து அவர்கள் கையெழுத்து போட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களது வேட்பு மனு நிராகரிக்கப்படும்.

மறுந்துவிட்டார்
இது பாமக வேட்பாளருக்கு தெரியாமல் போனதா அல்லது மறந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. வேட்பு மனுதாக்கல்லுக்கு கடைசி நேரத்தில் முன்மொழிபவரின் கையெழுத்து இல்லை. இதனால் பாமக மனுவை தேர்தல் அலுவலர் மறுத்தார். இதையடுத்து கடைசி நேரத்தில் வெளியில் ஓடிச் சென்று ஆறு பேரிடம் கையெழுத்து வாங்கி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னரே ஏற்கப்பட்டது,

வேட்புமனு
பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதி, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாமக சார்பில், ராஜமன்னார் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் பூந்தமல்லி டிரங்க் சாலையில் பேரணியாக பிற்பகல் 2.40 மணிக்கு ராஜமன்னார் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

6 பேரிடம் கையெழுத்து
வேட்பாளரை 6 பேர் முன்மொழியும் படிவம் இல்லை. அந்த படிவத்தில் 6 பேர் கையெழுத்து இடாததால் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடன் வந்த நிர்வாகி ஒருவர், வேட்புமனுவை வாங்கி வெளியே ஓடிச்சென்று 6 பேரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஓடி வந்தார். கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

படிவத்தை படித்தார்
3 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நேரம் என்பதால் சரியாக 2.58 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்து உறுதி மொழி படிவத்தை படித்தார். இதன் பிறகே பாமக வேட்பாளர் நிம்மதி பெருமூச்சுவிட்டார். இத்தனைக்கும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விதிமுறைகள் காலையிலேயே வேட்பாளர் ராஜமன்னார் மற்றும் கூட்டணி கட்சியான அதிமுக நிர்வாகிகள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வந்து விசாரித்து விட்டு சென்றார்கள். அப்படி இருந்தும் கடைசி நேரத்தில் மறந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் உடன் வந்த அதிமுகவினர் மற்றும் பாமக நிர்வாகிகள் புலம்பினார்கள்.












Click it and Unblock the Notifications