ரோபோ சங்கருக்கு அலெக்சாண்ட்ரியன் கிளிகள் கிடைத்தது எப்படி? வனத்துறைக்கு சொல்லாதது ஏன்?
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அலெக்சாண்ட்ரியன் கிளிகள் வந்தது எப்படி?
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அலெக்சாண்ட்ரியன் கிளிகள் இருந்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர், 11 ஆவது தெருவில் வசித்து வருபவர் காமெடி நடிகர் ரோபோ சங்கர். இவர் தனியார் தொலைகாட்சி காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் விஜயகாந்த் உள்ளிட்டோர் போல் மிமிக்ரி செய்து புகழடைந்தார்.
ரோபோ சங்கரின் நடனமும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இதையடுத்து இவர் சினிமா படங்களில் நடிக்க தொடங்கினார், விஸ்வாசம், மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் தனது வீட்டில் வளர்க்கும் கிளிகள் குறித்து கூறியிருந்தார்.
அந்த கிளிகள் அலெக்சாண்ட்ரியன் கிளிகள் ஆகும். இதை வனத்துறையின் அனுமதி இல்லாமல் வளர்க்கக் கூடாது என தெரிகிறது. இந்த நிலையில் ரோபோ சங்கர் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டு கிளிகள் குறித்து யாரோ வனத்துறைக்கு புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது.

வனத்துறை அதிகாரிகள்
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்றனர். அங்கு ரோபோ சங்கர் குறித்து விசாரித்த போது அவர் குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றிருப்பதாக கூறினர். இதையடுத்து அவரது வீட்டில் வளர்த்து வந்த 2 கிளிகளையும் கூண்டோடு வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வகை கிளிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது என்பதால் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

2 கிளிகள்
இந்த 2 கிளிகளும் கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த கிளிகளை ரோபோ சங்கர் எங்கே வாங்கினார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த கிளிகள் ரோபோ சங்கரின் நண்பர் ஒருவர் கொடுத்ததாக தெரிகிறது. அவர் வெளிநாடுக்கு மாற்றலாகி சென்றதால் அந்த கிளிகளை எடுத்து செல்ல முடியாது என்பதால் ரோபோடவிடம் கேட்ட போது அவர் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தாராம்.

3 ஆண்டுகளாக வளர்க்கும் ரோபோ சங்கர்
அதன் பேரில் அந்த கிளியை 3 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்களாம். இந்த கிளிகள் ரோபோவின் மகள் பிகில் படத்தில் நடித்த பிறகு வந்ததால் அதற்கு பிகில், ஏஞ்சல் என்ற பெயர்களை வைத்தனராம். ரோபோவை அந்த கிளிகள் ரோபோ என்றே அழைக்குமாம். கிளிகள் வளர்ப்பை வனத்துறைக்கு செல்லக் கூடாது என நினைத்திருந்தால் எப்படி அது குறித்த வீடியோவை நான் வெளியிட்டிருப்பேன் என ரோபோ தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

நண்பர் கொடுத்த பரிசு
நண்பர் கொடுத்த பரிசு குறித்து வனத் துறையினருக்கு சொல்ல வேண்டும் என்று தங்களுக்கு தோன்றவில்லை என்றும் கிளிகள் வளர்ப்பதை வனத்துறையினரிடம் சொல்லாமல் மறைக்க வேண்டும் என்பது தங்களது நோக்கமில்லை என்றும் ரோபோ சங்கர் தரப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் அனுமதியின்றி கிளிகளை வளர்த்ததாக ரூ 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காட்டில் விடப்படும் கிளிகள்
தற்போது கிண்டி சிறுவர் பூங்காவில் இருக்கும் இரு கிளிகளுக்கும் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு அவற்றை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பழகியதும் அவற்றை காடுகளில் விட்டுவிட வனத்துறை முடிவு செய்துள்ளதாம். ரோபோ சங்கர் தங்களது நண்பர் கொடுத்ததாக கூறியுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் அனுமதி ஏதேனும் பெற்றனரா என விசாரிக்கப்படும் என தெரிகிறது. மேலும் அவர்களும் அனுமதியின்றி வாங்கியிருந்தால் அவர்களுக்கும் அபராதம் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications