பெண்களுக்கு மாதம் ரூ.3000.. தேசிய அளவில் புதிய வடிவம் எடுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. செம முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவையின் 90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 3 கட்டங்களாக 2024 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 8, 2024 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு (NC) கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஐந்து முக்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார்.

காங்கிரஸின் ஐந்து வாக்குறுதிகள் பின்வருமாறு:
1) ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டம்.
2) காஷ்மீரி பண்டிட் பிரிவினருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது.
3) ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹3,000 வழங்கப்படும். அதாவது உரிமைத்தொகை வழங்கப்படும். பெண்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
4) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 11 கிலோ தானியங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
5) OBC கள் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பெற இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படும் .
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
உரிமை தொகை திட்டம்: இதன் மூலம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டின் திட்டங்கள் பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளன.
உதாரணமாக மதிய உணவு திட்டம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றது. அந்த வகையில் தற்போது மகளிர் உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டின் இந்த திட்டம் நாடு முழுக்க பல நாடுகளுக்கு ரோல் மாடல் திட்டமாக மாறி உள்ளது.
தமிழ்நாடு முன்னோடி: 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ப பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
திட்டத்தின் நோக்கம்: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.












Click it and Unblock the Notifications