கைது செய்த விதம் சரியில்லை.. ராஜேந்திர பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து.. காரசார வாதம்!
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் முன் ஜாமீன் கிடைக்காத நிலையில் தலைமறைவாகி இருந்த ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் ராஜேந்திர பாலாஜி போலீசார் மூலம் கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் நீதிமன்ற காவலில் ராஜேந்திர பாலாஜி அடைக்கப்பட்டார்.

முன் ஜாமீன்
தான் கைது செய்யப்படுவதற்கு முன்பே ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் முன் ஜாமீன் கிடைக்கும் முன் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுவிட்டதால், அவர் இந்த முறை ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 10ம் தேதியும், 12ம் தேதியும் (இன்று) விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் இன்று ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் கேட்டு வழக்கு
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனை என்றால் ராஜேந்திரபாலாஜி தனது பாஸ்போர்ட்டை சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். வெளியூர் செல்ல கூடாது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும். போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் போது செல்ல வேண்டும். சாட்சியங்களை தொல்லை செய்ய கூடாது என்று கூறி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி வழக்கு
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணை நடைபெற்றது. தமிழ்நாட்டு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதம் வைத்தார். இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதில் ராஜேந்திர பாலாஜி வெளியே வந்தால் மீண்டும் தப்பி செல்ல முயற்சி செய்வார். அவர் போலீஸ் விசாரணை ஒத்துழைக்கவில்லை.

உச்ச நீதிமன்றம்
ஜாமீன் அளிக்கப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வெளியே செல்வார். அவர் மீண்டும் தலைமறைவாகும் வாய்ப்புகள் உள்ளன என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது. அதற்கு நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேட்டு புகார்களை பார்த்தோம்.. இந்த முறைகேடுகளை அனுமதிக்க கூடாது. முறைகேடுகளை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது. ஆனால் அதே சமயம் இந்த கைது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம், என்று கூறினர்.

தமிழ்நாடு அரசு ராஜேந்திர பாலாஜி
இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு, ராஜேந்திர பாலாஜியை பொறுமையாகவே கைது செய்தோம். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தாக்கல் செய்தார். அப்போது அவரை கைது செய்யவில்லை. அவரை தொந்தரவு செய்யவில்லை. அதன்பின் ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும் அவர் தலைமறைவானார். இதனால் விசாரணையை கருத்தில் கொண்டு அவரை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த நபருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதம் வைத்தனர்.

நீதிபதிகள் கேள்வி
இதற்கு நீதிபதிகள் தரப்பு, அவர் தானே தலைமறைவானார்? அவரின் குடும்பம் என்ன செய்தது? எதற்காக அவரின் குடும்பத்தில் இருப்பவர்களை மற்றும் வழக்கறிஞர்களை காவல்துறையினர் தொல்லை செய்தனர்? அப்படி இந்த வழக்கில் அவசரம் என்ன? காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியாக இல்லை. ஏன் இந்த வழக்கில் அவசர அவசரமாக செயல்பட்டீர்கள். அவரின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது.

தமிழ்நாடு அரசு ராஜேந்திர பாலாஜி
விசாரணைக்கு வர இருந்த நிலையில் ஏன் அவசர அவசரமாக கைது செய்தீர்கள், தமிழ்நாடு அரசு இதில் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறதா ? என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, அவர் தலைமறைவாகிவிட்டார். அதனால் விசாரணைக்காக அவரை கைது செய்ய வேண்டியதாகிவிட்டது. அவர் மீது பல புகார்கள் வந்தன. அடுத்தடுத்த புகார்கள் காரணமாக அவரை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

ராஜேந்திர பாலாஜி
இந்த கைது நடவடிக்கையில் எங்கும் சட்டம் மீறப்படவில்லை. இதில் எங்கும் நாங்கள் விதிகளை மீறவில்லை. ராஜேந்திர பாலாஜி தலைமறைவானது தவறு. எங்கள் கைதில் எல்லா சட்ட முறைப்படியே செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதமே அவர் மீது புகார்கள் வந்தது. அப்போதில் இருந்து காத்து இருந்துவிட்டு பொறுமையாகவே கைது செய்தோம். சென்னையில் முன் ஜாமீன் விசாரணை நடக்கும் போது கூட அவரை கைது செய்யவில்லை.

ஜாமீன்
ஓடி ஒளிந்தது அவர்தான். அவரின் வாதத்தை மட்டும் கேட்டு நீதிமன்றம் ஒரு தலைப்பட்சமாக பேச கூடாது, என்று அரசு சார்பாக வாதம் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வாதத்தை கேட்ட நீதிபதிகள்.. நாங்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை. அப்படி செயல்பட்டு இருந்தால் கடந்த வாரமே அவருக்கு ஜாமீன் வழங்கி இருப்போம் என்று கூறினர். ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர் வெளியூர் செல்ல கூடாது என்று கூறி ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications