ஜனநாயகனை பார்த்த 5 பேர்.. நோ சொன்ன 1 அதிகாரி.. ஒரு படம் எப்படி சென்சார் ஆகிறது? சுவாரசிய பின்னணி
சென்னை: நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. படத்திற்கு தணிக்கை கிடைக்காத காரணத்தால் தற்போது வெளியீடு தள்ளிப்போய் உள்ளது. ஜனநாயகன் பட வெளியீட்டைத் தேதி குறிப்பிடாமல் தயாரிப்பாளர்கள் தள்ளி வைத்துள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் படங்கள் எப்படி சென்சார் செய்யப்படுகின்றன.. இதற்கான நடைமுறைகள் என்னென்ன? இதற்கு பின் உள்ள அரசியல் என்ன? சிக்கல்கள் என்னென்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விரிவாக இங்கே பார்க்கலாம்.

சென்சார் குழு எப்படி அமைக்கப்படும்?
திரைப்படங்களுக்கு சென்சார் சான்று எனப்படும் திரையரங்கு வெளியீட்டுச் சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பு, மத்திய அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட தணிக்கைத் துறையிடமே (Censor Board) இருக்கிறது. சில உறுப்பினர்களுக்கு அரசியல் பின்னணி இருந்தாலும், அவர்கள் ஒவ்வொரு படத்தையும் தனிப்பட்ட அல்லது அரசியல் செல்வாக்கின்றி, நடுநிலையுடன் மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதே விதிமுறை.
ஒரு படம் எப்படி சென்சார் ஆகும்?
சான்றிதழுக்குச் சமர்ப்பிக்கப்படும் ஒரு படத்தை, மண்டல அதிகாரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட திரையிடல் குழு முதலில் பார்வையிடுகிறது. மண்டல் அதிகாரி போக.. இந்த குழுவில் இருபாலரும் அடங்கிய நான்கு உறுப்பினர்கள் இடம்பெறுவர். அவர்கள் முழு படத்தையும் கவனமாகப் பார்த்து, காட்சிகள், வசனங்கள் அல்லது ஒலிகள், எதற்கெல்லாம் மாற்றம் அல்லது நீக்கம் தேவைப்படும் என்பதைப் பதிவு செய்வார்கள்.
திரையிடலுக்குப் பிறகு, படக்குழுவினர் கலந்துரையாடலுக்கு அழைக்கப்படுவர். அப்போது, தணிக்கை அதிகாரிகள் ஒவ்வொரு மாற்றத்திற்கான காரணங்களையும் விளக்குவார்கள். தயாரிப்பாளர், இயக்குநருக்கு படைப்புத் தேர்வுகளைப் பாதுகாத்து விளக்கமளிக்க வாய்ப்பு வழங்கப்படும். விளக்கங்கள் ஏற்கத்தக்கதாக இருந்தால், குழு சில ஆட்சேபணைகளை மாற்றியமைக்கவோ அல்லது திரும்பப் பெறவோ கூடும்.
படத்தில் எப்படி கட் செய்யப்படும்?
வெட்டுக்களின் பட்டியல் இறுதியானதும், திரைப்படக் குழு தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும். பின்பு, மாற்றங்கள் சரியாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். வன்முறை, மொழி அல்லது உணர்ச்சிகரமான உள்ளடக்கக் குறைப்பு அறிவுறுத்தல்கள், திருத்தங்களுடன் பொருந்துகிறதா எனச் சரிபார்ப்பது முக்கியம். மாற்றங்கள் போதுமானதாக இல்லையெனில், மேலும் திருத்தங்கள் கோரப்படும்.
பட சென்சாரில் முரண்பாடு ஏற்பட்டால் என்ன செய்வது?
ஆரம்ப முடிவில் முரண்பாடு ஏற்பட்டால், படக்குழு மறுஆய்வுக் குழுவிடம் (Revising Committee) மறுபரிசீலனை செய்யக் கோரலாம். மண்டல அதிகாரி அடங்கிய ஒன்பது பேர் கொண்ட இந்தக் குழு, திரைப்படத்தை மீண்டும் முழுமையாகப் பார்க்கும். அவர்களின் மதிப்பீட்டின்படி, வெட்டுக்களைக் குறைக்கவோ, நீக்கவோ அல்லது அசல் பட்டியலுக்கு அப்பால் கூடுதல் மாற்றங்களையும் பரிந்துரைக்கலாம்.
மறுஆய்வுக் குழுவின் முடிவுக்குப் பிறகும் தயாரிப்பாளர்களுக்குத் திருப்தியில்லை என்றால், அதை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராட முழு உரிமை அவர்களுக்கு உண்டு.
சிறு திருத்தங்கள் தேவைப்படும் படங்கள் விரைவாக அனுமதி பெறும், சில சமயங்களில் ஒரு நாளிலேயே சான்றிதழ் வழங்கப்படும். விரிவான மாற்றங்கள் கோரப்பட்டால், படம் திருத்தப்பட்டு மறுசமர்ப்பிக்கப்பட வேண்டியிருப்பதால் செயல்முறை நீளும். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் முடிந்ததும், தாமதமின்றி சான்றிதழ் பொதுவாக வழங்கப்படும்.
சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்
மறுசமர்ப்பிப்புக்குப் பிறகு கணிசமான தாமதங்கள் ஏற்படுவது அரிது. அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் சான்றிதழ் மறுக்கப்பட்டால், அது செயல்முறை குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பும். வெட்டுக்களை ஏற்கவா/எதிர்க்கவா எனத் தயாரிப்பாளர்கள் முடிவெடுக்க நேரம் எடுப்பதும் தாமதத்திற்குக் காரணமாகும். ஆனாலும், தணிக்கை அதிகாரிகள் திரையிடப்பட்ட சில மணிநேரங்களுக்குள்ளேயே தங்கள் பரிந்துரைகளை வழக்கமாகத் தெரிவித்துவிடுவார்கள்.
மிகவும் தீவிர சூழல்களில், படத்தில் அசாதாரணமாக அதிக வெட்டுக்களைச் செய்ய அறிவுறுத்தப்படலாம். செய்யப்படும் மாற்றங்கள் படத்தின் சாரத்தையே முழுமையாக அகற்றும் அளவுக்கு விரிவாக இருந்தால், அந்த படத்திற்கு சான்றிதழ் வழங்க சான்றிதழை குழு முற்றிலுமாக மறுக்கலாம்.
ஜனநாயகன் படத்தின் சிக்கல் என்ன? திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் வாதம்
நேற்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சார்பில் ஆஜரான ASG, பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், தான் திரைப்படம் பார்த்த பிறகு தனது ஆட்சேபனைகள் கூறி இருந்தாலும்.. அது பதிவு செய்யப்படவில்லை என்று புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.
U/A 16+ சான்றிதழ் வழங்குவதற்காக வாரியம் பரிந்துரைத்த வெட்டுக்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும், படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப CBFC எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ASG, CBFC தலைவர், பரிசீலனைக் குழு படம் பார்த்த பிறகும் கூட, ஒரு திரைப்படத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட முழுவதும் அதிகாரம் பெற்றவர் என வாதிட்டார்.
ஜன நாயகன் படத்தின் சிக்கலுக்கு முக்கிய காரணம்
'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார்.
ஒரு திரைப்படம் பரிசீலனைக் குழுவால் பார்க்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் வழங்கப்பட்ட பிறகும் கூட, அக்குறிப்பிட்ட பரிந்துரைகளில் CBFC தலைவர் திருப்தி அடையாத பட்சத்தில், மறுபரிசீலனை செய்வதற்காக அதை சீராய்வுக் குழு அல்லது மறுபரிசீலனைக் குழுவிற்கு அனுப்ப அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என ASG விளக்கினார். சினிமாட்டோகிராஃப் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் இந்த நடைமுறைகளை தெளிவாக வரையறுக்கிறது.
பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது இறுதி முடிவு அல்ல. CBFC தலைவருக்கு படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்பும் அதிகாரம் இன்னும் உள்ளது. இந்தப் பரிசீலனைக் குழுவில் தணிக்கைக் குழுவில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள். ஒரு புதிய குழுவால் படம் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என ASG வலியுறுத்தினார்.
தணிக்கைச் சான்றிதழ்
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது மறுக்கப்படுவதற்கு முன்பாகவோ தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும் ASG வாதிட்டார். புகார் கிடைத்ததை அடுத்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்கல் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு சென்னை மண்டல அதிகாரிக்கு CBFC தலைவர் கடிதம் எழுதி இருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
இந்த சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், CBFC-யின் தலைவர் சட்டத்தின்படி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த முடிவை எடுத்தார் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த சிக்கலான வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பே 'ஜன நாயகன்' படத்தின் வெளியீட்டுக்கான அடுத்த அடியை முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications