வண்டலூருக்கு வந்த வாழ்வு.. பெருங்களத்தூருக்கு பெரிய குட்நியூஸ்.. சென்னை புறநகரில் இனி ஈஸிதான்
சென்னை: சென்னை மாநகரின் நுழைவாயிலான பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. பெருங்களத்துாரில் இருந்து நெடுங்குன்றம் மார்க்கமாக மேம்பாலப் பணிகள் முடியாமல் உள்ள நிலையில், பெருங்களத்துார் - வண்டலுார் மார்க்கமான பாதை பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பு வரை பெருங்களத்தூர் தான் சென்னையின் நுழைவு வாயிலாக இருந்தது. இப்போது கிளாம்பாக்கம் தான் சென்னை மாநகரின் நுழை வாயில் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் திறக்கப்படுவதற்கு முன்பு வரை அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் தாம்பரம் உள்பட சென்னை நகருக்குள் வராமல், கோயம்பேடு செல்லும் போது, பெருங்களத்தூரில் நின்று தான் சென்று வந்தன.

இதனால் பெருங்களத்தூரில் தாங்க முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் வழியாக செல்லும் மக்களின் நிலை இப்படி என்றால், பெருங்களத்தூரில் வாழும் மக்களின்நிலையே, தீவில் வாழ்வது போன்று மாறியது. சாலையில் ஒருபக்கம் உள்ளவர்கள் மறுபக்கம் செல்ல நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஒருபுறமும்,மறுபுறமும் ரயில்வே கேட்டில் தவிக்கும் நிலையும் இருந்தது.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பிய அரசு, பெருங்களத்துாரில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க மேம்பாலங்கள் அமைக்க திட்டமிட்டது. இதற்காக கடந்த 2020ல் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததுடன் மேம்பாலங்கள் கட்டும் பணியை ஆரம்பித்தது.
பெருங்களத்துார் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராசிங் மேம்பாலம் மற்றும் பெருங்களத்துாரில் இருந்து வண்டலுார் மற்றும் நெடுங்குன்றம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலம் கட்ட முடிவு செய்து அரசு பணிகளை தொடங்கியது. கோவிட் பொதுமுடக்கம் காரணமாக பணிகள் அப்படியே ஓராண்டுகள் வரை நின்றது. நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கட்டுமான பணிகளிலும் விறுவிறுப்பாக நடைபெறவில்லை. கோவிட் முடிந்த பின்னரே அதாவது 2021ம் ஆண்டு இறுதியில் இருந்தே பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. முதற்கட்டமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, 2022 செப்டம்பரில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, பெருங்களத்துாரில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதையும் கடந்தாண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது.
இந்த இரண்டு பாலங்கள் மற்றும் கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதன் காரணமாக பெருங்களத்தூர் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. அதேநேரம் தற்போத ரவுண்டானா பணிகளும் முடிக்கப்பட்டிருக்கிறது. பெருங்களத்துார் - வண்டலுார் மார்க்கமான பாதை பணி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதன் காரணமாக இன்னும் ஓரிரு மாதத்திற்குள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இப்பாதை திறந்தால், பெருங்களத்துாரில் நெரிசல் வெகுவாக குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
அதேநேரம் பெருங்களத்துாரில் இருந்து நெடுங்குன்றம் மார்க்க மேம்பாலப் பணிகள், மிக தாமதமாக நடக்கிறது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் பாதை அமைக்கப்படுவதால் இதற்கு வனத்துறை அனுமதி, துணை மின் நிலையத்தையும் மாற்றி அமைக்க வேண்டியது உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஆகி உள்ளது.
இதன் காரணமாக பெருங்களத்தூர் மேம்பாலத்தில் இரண்டு பாதைகள் திறந்தும், நெடுங்குன்றம் வழியாக செல்வோருக்கு பயன் இல்லாத நிலையே நீடிக்கிறது, இதனால் பெருங்களத்துார் பகுதிக்குள் செல்ல வேண்டிய வாகனங்கள், வழக்கம் போல் 2 கி.மீ., துாரம் சென்று திரும்பி வந்து, ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரயில்வே கேட்டிலும் நீண்ட நேரம் நிற்கும் நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications