வேதம் உங்களைக் காக்கும்! விபத்து கேஸில், சாஸ்திரியை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காப்பாற்றியது எப்படி?
சென்னை: மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் (Justice GR Swaminathan), சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவரை விமர்சித்த விவகாரத்தால் சர்ச்சைக்குள்ளானார். ஆனாலும், அவரது கடந்தகால அனுபவங்கள் சில சமயம் உணர்வுப்பூர்வமான தீர்ப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன. வழக்கறிஞராக இருந்தபோது, விபத்து வழக்கில் தண்டனை பெற்ற ஒரு சாஸ்திரியை எவ்வாறு காப்பாற்றினார் என்பதைப் பற்றி அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.
கடந்த வாரம் சென்னை தி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்:

வேதங்களை 7 ஆண்டுகள் கற்றவர்
"எனக்கு ஒரு சாஸ்திரிகள் நண்பர் இருந்தார். அவர் ஏழு ஆண்டுகள் வேதங்களைக் கற்று, முழுமையாக வேத தர்மங்களைப் பின்பற்றி வாழ்பவர். ஒருநாள், அவர் தனது நண்பருடன் என்னைப் பார்க்க வந்தார். சாஸ்திரியின் கண்கள் கலங்கியிருந்தன, அவரால் பேச முடியவில்லை. நான், 'என்ன விஷயம், சொல்லுங்கள்' என்று கேட்டேன்.
அவரால் பேச முடியவில்லை என்பதால், அவரது நண்பர் என்னிடம் பேசினார். சாஸ்திரி ஒரு வழக்கில் தண்டனை பெற்றுள்ளதாகவும், அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். என்னால் இதை நம்ப முடியவில்லை. வேதங்களையும், வேதங்களின் விழுமியங்களையும் பின்பற்றி வாழும் ஒருவருக்கு இது எப்படி நடக்கும் என்று நினைத்தேன்.
டீக்கடையில் நின்றவர் மீது மோதி விபத்து
சாஸ்திரியின் சகோதரி அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவர்கள் கோவில்களுக்குச் சென்றுவிட்டு காரில் வரும்போது, கட்டுப்பாடு இழந்து ஒரு டீக்கடை ஓரம் நின்றுகொண்டிருந்த நபர் மீது கார் மோதியுள்ளது. இதில் அவர் உயிரிழந்துள்ளார். தனது சகோதரி காரை ஓட்டியிருந்தாலும், அவர் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதால் குற்றத்தை சாஸ்திரி ஒப்புக்கொண்டிருக்கிறார். காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் பொதுவாக அதிகபட்சம் ஆறு மாதங்கள் சிறை விதிக்கப்படும். ஆனால் அவருக்கு 18 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை உள்ள வழக்குகளில் உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செல்லலாம், மேல்முறையீட்டுத் தீர்ப்புக்கு ஏற்ப தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். நான் சாஸ்திரியிடம், 'ஏன் முன்கூட்டியே என்னிடம் சொல்லவில்லை?' என்று கேட்டேன்.
எனக்கு தர்மசங்கடமாக இருந்தது
அவர், 'எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது' என்றார். நான் 26 வருடங்களாக வழக்கறிஞராக இருந்துள்ளேன், எட்டு வருடங்களாக நீதிபதியாக உள்ளேன். இதுபோல ஒரு உணர்வுப்பூர்வமான வழக்கை நான் பார்த்தது இல்லை. இந்த வழக்கை நான் மேல்முறையீட்டிற்குக் கொண்டு சென்றேன். வழக்கில் சாட்சிகள் அனைவரும், 'டீக்கடையில் நின்றவர் மீது கார் மோதியது, அவர் இறந்தார்' என்றுதான் சொன்னார்கள்.
காரை யார் ஓட்டியது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த ஒரு அம்சத்தை வைத்து நான் வழக்கை முன்னெடுத்துச் சென்றேன். விதிவசமோ அல்லது அதிர்ஷ்டமோ தெரியவில்லை, இந்த வழக்கை விசாரித்தது எனது வகுப்புத் தோழர். 'யார் காரை ஓட்டியது என்பதற்குச் சாட்சி இல்லாதபோது அவர் எப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்?' என்ற கேள்வி முதன்மையாக வைக்கப்பட்டது.
அன்றைக்கு தான் புரிந்துகொண்டேன்
தீர்ப்பு தலைகீழாக மாறியது. எனது சாஸ்திரி நண்பர் விடுதலை செய்யப்பட்டார். அந்த நாளில்தான், நான் ஒன்றைப் புரிந்துகொண்டேன். 'வேதங்களை நீங்கள் காப்பாற்றினால், வேதம் உங்களை காப்பாற்றும்.' அதுவரை இந்த விஷயத்தை நான் தீவிரமாக எடுத்துக்கொண்டது இல்லை. அந்த தருணம்தான் என்னை மாற்றியது" என்றார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.












Click it and Unblock the Notifications