100 Km வேகத்தில் சென்ற குஷ்பு கார்.. சைடு விடாத கண்டெய்னர் லாரி.. விபத்து நிகழ்ந்தது எப்படி..?
சென்னை: கடலூரில் நடைபெறும் பாஜகவின் வேல் யாத்திரையில் கலந்துகொள்வதற்காக சென்ற குஷ்புவின் காரில் கண்டெய்னர் லாரி மோதிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஷ்பு உள்ளிட்ட அவருடன் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களின்றி இந்த விபத்திலிருந்து தப்பித்துள்ளனர்.
இதனிடையே தனது கார் விபத்தில் சிக்கியதை பொருட்படுத்தாமல் மாற்றுவாகனம் மூலம் கடலூர் சென்றிருக்கிறார் குஷ்பு.

பார்ச்சூனர்
அரசியல் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் குஷ்பு தனது டொயோட்டா பார்ச்சூனர் காரில் தான் பயணிப்பார். கம்பீரமாக முன் இருக்கையில் அமர்ந்து கட்சிக் கொடியை பறக்கவிட்டபடி செல்வது அவருக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் கலந்துகொள்வதற்காக தனது டொயோட்டா பார்ச்சூனர் காரில் இன்று காலை 8 மணியளவில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

போக்குவரத்து நெரிசல்
காரை எப்போதும் ஓட்டும் ஓட்டுநரே ஓட்டிச் சென்றிருக்கிறார். சென்னையின் போக்குவரத்து நெரிசலால் புறநகரை சென்றடையும் வரை ஊர்ந்து ஊர்ந்து சென்ற குஷ்பு கார், நகருக்கு வெளியே சென்றதும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. சுமார் 100 கி.மீ. வேகத்தில் குஷ்புவின் கார் கடலூரை நோக்கி சீறிக்கொண்டிருந்த நிலையில், சரக்கு நிரப்பப்படாத கண்டெய்னர் லாரி ஒன்று சாலையின் வலதுபுறம் சற்று ஏறியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

முந்திச்செல்ல முயற்சி
இடது புறம் கண்டெய்னர் லாரி சென்ற நிலையில் வலதுபுறம் குஷ்புவின் கார் அந்த லாரியை முந்திச்செல்ல முயன்றுள்ளது. அப்போது காரை உரசும் வகையில் லாரியை வலதுபுறம் சற்று ஏற்றியதில், காரின் பின் இருக்கை கதவு சிதைந்துவிட்டது. கொஞ்சம் அசந்திருந்தால் காரின் பக்கவாட்டு பகுதி முழுமையாக சேதமடைந்து உள்ளே அமர்ந்திருந்தவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். லாரி காரை உரசியவுடன் குஷ்புவின் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு சாமர்த்தியமாக காரை இன்னும் வலது புறம் ஏற்றி பெரும் விபத்தை தவிர்த்தார்.

பெரிய கூட்டம்
காரில் பின் இருக்கையில் குஷ்புவின் பெண் உதவியாளர் மற்றும் பாஜக பெண் நிர்வாகிகள் அமர்ந்திருந்த நிலையில் அவர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை. அதேபோல் முன் இருக்கையில் அமர்ந்திருந்த குஷ்புவுக்கும் காயங்கள் எதுவும் இல்லை. காரில் இருப்பது குஷ்பு எனத் தெரிந்தவுடன் பெரிய கூட்டமே அங்கு திரண்டிருக்கிறது. இதையடுத்து அங்கு வந்த போலீஸ் இரண்டு ஓட்டுநர்களிடமும் விசாரணை நடத்தத் தொடங்கியது.

முருகன் அருள்
இதனிடையே மாற்று வாகனம் மூலம் குஷ்பு கடலூரை நோக்கி மீண்டும் பயணமானார். இந்நிலையில் விபத்து குறித்து அறிய ஒன் இந்தியா தமிழ் குஷ்புவை தொடர்புகொண்ட போது அவர் கூறியதாவது; ''நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு எந்தக் காயமும் ஏற்பட வில்லை. எல்லாம் எனது கணவர் வணங்கும் முருகன் அருள் என நினைக்கிறேன். நீங்கள் காரை பார்த்தால் காயம் இல்லாமல் எப்படி தப்பித்தார்கள் என யோசிப்பீர்கள். அந்தளவுக்கு கார் சேதமடைந்துள்ளது. எங்களுக்கே பெரும் ஆச்சரியமாக உள்ளது. தற்போது கடலூர் சென்றுகொண்டிருக்கிறேன்.'' எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications