நீட் தேர்வுக்கு முன்பு எம்பிபிஎஸ் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர்? அண்ணாமலை கேள்வி
சென்னை: நீட் தேர்வுக்கு முன்னதாக அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் விவரத்தை தர மறுப்பது ஏன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும் திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன், முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?
நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா? இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வரும் நிலையில் நடிகர் விஜய் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் நீட் குறித்து பேசியிருந்தார்.
அவர் பேசுகையில் நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வில் நான் மூன்று முக்கிய பிரச்சினைகளை பார்க்கிறேன். முதலில் நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.
கல்வி முன்பு மாநில பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு பொது பட்டியலுக்கு கொண்டு வந்த போதுதான் சிக்கல் ஏற்பட்டது. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை அடிப்படையில் கல்வி கற்றலுக்கே எதிரான விஷயமாக பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும்.
பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல. இரண்டாவது மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் எழுத முடியும். அதுவும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்பதை யோசித்து பாருங்கள்.
மூன்றாவதாக, நீட் தேர்வு குளறுபடிகள் பற்றி நாம் நிறைய செய்திகளை வாசித்தோம். அதன்மூலம் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே மக்களுக்குப் போய்விட்டது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் ஊடகச் செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயமாக உள்ளது என கூறிய அவர் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு கோரி போடப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications