"தப்பே இல்லை".. முதல் ஆளாக துண்டு போட்ட அண்ணாமலை.. 15 சீட்டாமே?.. எடப்பாடி என்ன பண்ணுவாரோ?
சென்னை: மெகா கூட்டணி.. இந்த வார்த்தைதான் தமிழ்நாடு அரசியலில் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் வார்த்தை. அதிமுகவில் என்னதான் உட்கட்சி மோதல் நிலவி வந்தாலும்.. அந்த கட்சி அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வி அடைந்து வந்தாலும் கூட.. எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி வைக்க போகிறோம் என்று சொன்னதும் அது அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்திவிட்டது.
2024 லோக்சபா தேர்தலுக்கு மிகப்பெரிய அளவில் கூட்டணி வைக்க போகிறோம் என்று கூறி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதோடு லோக்சபா தேர்தலோடு சேர்த்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் வரும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறாராம்.
இரண்டு தேர்தல்களும் ஒன்றாக நடக்கும். 2024 லோக்சபா தேர்தல் தனியாக நடந்தாலும் கூட கண்டிப்பாக அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறதாம்.

ஆனால் யார்?
ஆனால் அதிமுகவின் இந்த மெகா கூட்டணியில் இணைய போவது யார் என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது. திராவிட இயக்கங்களுடன் கூட்டணி கிடையாது என்று பழைய புராணத்தை மீண்டும் பாமக பாட தொடங்கி உள்ளது. திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பாமக சொல்ல தொடங்கி உள்ளது. அதிலும் கூட அவ்வப்போது திமுகவை பாராட்டி பேசும் பாமக தலைவர்கள் எந்த இடத்திலும் அதிமுக தலைவர்களை பாராட்டி பேசவே இல்லை. தற்போதைய அரசியல் சூழல்படி அதிமுகவை விட திமுகவிடம்தான் பாமக இன்னும் நட்பாக இருக்கிறது.

தேமுதிக
இன்னொரு பக்கம் தேமுதிக அதிமுகவுடன் மோதிவிட்டு கூட்டணியை விட்டு சட்டசபை தேர்தலின் போது வெளியேறியது. அப்போது ஏற்பட்ட காயங்கள் தேமுதிகவிற்கு ஆறி இருக்குமா என்று தெரியவில்லை. பாமக அதிமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் அதே கூட்டணியில் தேமுதிக இணையுமா என்பதெல்லாம் சந்தேகம். அப்படியே தேமுதிக இணைந்தால் அவர்களின் வாக்கு வங்கி மிக குறைவாக இருப்பதால், என்ன மாதிரியான பயனை அவர்கள் கூட்டணிக்கு வழங்கிடுவார்கள் என்ற கேள்வியும் உள்ளது.

திமுக
இது போக திமுக கூட்டணியிலும் பெரிதாக அதிர்ச்சி இல்லை. திருமாவளவன், துரை வைகோ, காங்கிரஸ் தலைவர்கள், சிபிஎம், சிபிஐ தலைவர்கள் எல்லோரும் திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அதிலும் டெல்லியில் காங்கிரஸ் - திமுக தலைவர்கள் நெருக்கம், ஸ்டாலின் - திருமா நட்பு, திமுக - சிபிஎம் தமிழ்நாடு கடந்து கேரளாவிலும் நெருக்கம் என்று மிகவும் நட்பாக இவர்கள் கூட்டணி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இவர்கள் கூட்டணியில் இருந்தும் பெரிதாக கட்சிகள் வெளியேறி அதிமுக கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் இல்லை.

பாஜக
அமமுக டிடிவி தினகரன் மெகா கூட்டணிக்கு ஆதரவாக பேசினாலும், எடப்பாடியுடன் அவர் சுமுகமாக செல்வது எல்லாம் சந்தேகம்தான். அப்படி பார்த்தால் பாஜக மட்டுமே தற்போது அதிமுக கூட்டணிக்கு முழுமையாக ரெடியாகி இருக்கிறது. அண்ணாமலையும் முதல் ஆளாக அதிமுக அமைக்கும் மெகா கூட்டணியை வரவேற்று பேசி உள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை அளித்த பேட்டியில், அதிமுக மெகா கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதில் எந்த தவறும் இல்லை.

தவறு இல்லை
அதிமுக தலைமையில் செயல்பட நாங்கள் தயார். இதில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக பெரிய கட்சி. அவர்கள் தலைமையில் நாங்கள் செயல்பட தயார். 2024 தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நாங்கள் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம். யார் பலமான கட்சி என்பது அந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம், என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இப்படி முதல் ஆளாக அதிமுகவின் உருவாகாத மெகா கூட்டணியில் பாஜக துண்டு போட்டுள்ளது.

15 சீட்
தமிழ்நாட்டில் பாஜக 15+ இடங்களை லோக்சபா தேர்தலில் வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதற்காகவே 70 மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து உள்ளனர். அப்படி இருக்கும் போது பாஜகவிற்கு அதிமுக கூட்டணியில் 15 இடங்கள் கிடைக்குமா என்பதெல்லாம் சந்தேகம்தான். அதிமுக மெகா கூட்டணி உண்மையிலேயே "மெகா" கூட்டணியாக பல கட்சிகளை சேர்த்துக்கொண்டு அமையும் பட்சத்தில் பாஜகவிற்கு 5-6 சீட்டுகள் கிடைப்பது கூட சந்தேகம்தான்.












Click it and Unblock the Notifications