பருவமழை இழப்பீடு! மத்திய அரசு கைவிரித்துவிட்டது! சட்டப்பேரவையில் அமைச்சர் உடைத்த உண்மை!
சென்னை: தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட வடகிழக்கு பருவமழை இழப்பீடு தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லை என வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை இழப்பீடாக மத்திய அரசிடம் 6 ஆயிரத்து 230 கோடியே 45 லட்சம் ரூபாயை தமிழக அரசு கேட்டதாகவும், ஆனால் கொடுத்ததோ வெறும் 352 கோடியே 85 லட்சம் ரூபாய் தான் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட் மீதான விவாதங்கள் திங்கள்கிழமை தொடங்கி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகின்றன. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைவாரியாக அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் ஏற்பட்ட இழப்புகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட இழப்பீடு தொகை எவ்வளவு, கிடைத்த தொகை எவ்வளவு என்ற கேள்வியை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பியிருந்தார்.

அமைச்சர் ராமச்சந்திரன்
அதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வடகிழக்கு பருவமழை இழப்பீடாக மத்திய அரசிடம் 6 ஆயிரத்து 230 கோடியே 45 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் ஆனால் 352 கோடியே 85 லட்சம் ரூபாயை தான் மத்திய அரசு தமிழகத்திற்கான இழப்பீடு தொகையாக கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதன் மூலம் தமிழக அரசு கேட்ட தொகையில் கால் பங்கு கூட முழுமையாக கிடைக்கவில்லை என்பதை அமைச்சர் பேரவையில் போட்டுடைத்தார்.

தற்காலிக நிவாரண நிதி
மேலும் தமிழகத்துக்கு தற்காலிக நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.1,510 கோடி கேட்டோம் என்றும் ஆனால் அதையும் மத்திய அரசு கொடுக்க முன்வரவில்லை எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை இழப்பீடு தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள இந்த தகவல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டெல்லி பயணம்
இதனிடையே வரும் ஏப்ரல் 2-ம் தேதி திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு வேளை இந்தச் சந்திப்பு நிகழ்ந்தால் அப்போது இந்த விவகாரம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications