சென்னை மெரினா கடற்கரை செல்ல நேர கட்டுப்பாடு! என்ன காவல்துறை துன்புறுத்தலா? ஐகோர்ட் அதிரடி கேள்வி
சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சென்னை மெரினாவில் இரவில் நேரக்கட்டுப்பாடு விதிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னை மெரினாவில் இரவு 10 மணிக்கு மேல் மக்களை போலீசார் எப்படி துன்புறுத்துகின்றனர்? ஆதாரம் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னையில் மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மெரினா கடற்கரைக்கு சென்று பொழுதை கழிக்கின்றனர். இரவில் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரைக்கு சென்று மணில் அமர்ந்து பேசிவிட்டு வீடு திரும்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் சென்னை மெரினா கடற்கரையில் இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் இருக்க போலீசார் அனுமதிப்பது இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்திலும் இதனை போலீசார் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜலீல் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‛‛ கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இத்தகைய சூழலில் வெப்பத்தைத் தணிக்க மெரினா கடற்கரையில் கூடும் மக்களை இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது எனக்கூறி போலீசார் அப்புறப்படுத்துகின்றனர்.
ஓட்டல்கள் 24 மணி நேரம் செயல்படுகின்றனர். அதேபோல் நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தைத் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற உத்தரவிட வேண்டும்.

மேலும் மெரினா கடற்கரைக்கு வரும் மக்களை இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்கவும், அவர்களை துன்புறுத்தக் கூடாது என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மெரினா செல்பவர்களை காவல்துறையினர் எப்படி துன்புறுத்துகின்றனர்? என கேள்வி எழுப்பினர். மேலும் காவல்துறையினர் துன்புறுத்துவதாக கூறும் நிலையில் அதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications