Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் தனியார் மதுபான கடைகள் திறக்கப்படுவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் தனியார் மதுபான கடைகள் அதிக அளவில் சத்தமே இல்லாமல் திறக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் ஆயிரக்கணக்கில் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. டாஸ்மாக்கை விடவும் அதிக நேரத்தில், அதாவது காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தனியார் மதுக்கடைகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் தனியார் மதுபான கடைகள் திறக்கப்படுவது எப்படி? அதன் விதிமுறைகள் என்ன என்பதை பார்ப்போம்.

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கடைகள் திறக்கப்படுவது என்பது, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட மதுபான உரிமங்களின் கீழ் வரும் இவை வழக்கமான சில்லறை மதுபானக் கடைகள் அல்ல. இந்த உரிமங்கள் பொதுவாக டிடிஎஸ் (The Tamil Nadu Denatured Spirit, Methyl Alcohol and Varnish (Sale in Retail) Rules, 2007) மற்றும் பிற துணை விதிகளின் கீழ் வழங்கப்படும்.

How private liquor shops are being opened in Tamil Nadu under the name of Manamagizh Mandram

மனமகிழ் மன்றங்கள் அல்லது கிளப்புகள் மதுபானம் விற்க அனுமதி பெறும் முக்கிய உரிம வகைகள் மற்றும் அதற்கான பொதுவான விதிமுறைகள் இருக்கிறது. மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்படும் உரிமம், FL-2 உரிமம் மற்றும் FL-3 உரிமம் வகைகளின் கீழ் வரும் என்று கூறப்படுகிறது.

கிளப்கள் உரிமம் எப்படி கிடைக்கிறது

பொதுவாக FL-2 உரிமம் என்பது பொதுவாக நட்சத்திர விடுதிகள், மிகப்பெரிய தனியார் பார்கள் மற்றும் மிக பிரபலமான மனமகிழ் மன்றங்கள், பெரிய கிளப்கள் மற்றும் சில அரசு/தனியார் விடுதிகளுக்கு வழங்கப்படுவது ஆகும். இங்கு விலை மிக மிக அதிகமாக இருக்கும். இந்த உரிமத்தின் கீழ், உரிமம் பெற்ற இடத்தில், அங்கு ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அல்லது உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானங்களை உட்கொள்ளவும், வாங்கவும் அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சில்லறை விற்பனை செய்ய அனுமதி என்பது கிடையாது.

FL-3 உரிமம் மூலம் மனமகிழ் மன்றங்கள் திறப்பு

FL-3 உரிமம் என்பது சில விளையாட்டு கிளப்புகள், சமூகக் கிளப்புகள் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உரிமம், கிளப்பின் நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டும் மதுபானங்களை வாங்கவும் உட்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இங்கு மதுபானங்களை வாங்கவோ, உட்கொள்ளவோ சட்டப்படி அனுமதி கிடையாது.

மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் தருவது யார்


மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்குவது மாநில அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகும். இதில் அவர்கள் குறிப்பிட்ட அளவு முக்கிய நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். அதன்படி மனமகிழ் மன்றத்தைத் தொடங்குவதற்கு முன், கிளப்பின் விதிமுறைகள், கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அனுமதி ஆகியவற்றுடன் சேர்த்து, மதுபான உரிமத்துக்காக அரசிடம் முறையாக அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை

பொதுவான விதிமுறைகளை தாண்டி, சில முக்கியமான விதிமுறை உள்ளது. அதாவது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்களிலிருந்து குறிப்பிட்ட தூர இடைவெளியை பராமரிக்க வேண்டும். மதுபானம் அருந்தும் இடம் தனியாக, முறையான பாதுகாப்பு மற்றும் காற்றோட்டத்துடன் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். மதுபானங்கள் அங்கீகரிக்கப்பட்ட மொத்த விநியோகஸ்தர்கள் ( டாஸ்மாக் மொத்தக் கிடங்கு) மூலம் மட்டுமே பெற வேண்டியதிருக்கும். கிளப்புகள் மதுபானங்களை விற்க மற்றும் பரிமாற அனுமதிக்கப்பட்ட நேரத்தை பின்பற்ற வேண்டும். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கடைகள் திறக்கப்படுவது ஏன்

தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள் திறக்க அரசு கொள்கை ரீதியாக அனுமதிக்காமல் உள்ளது. டாஸ்மாக் மட்டுமே சில்லறை வினியோகமாக மதுபானத்தை விற்கிறது. பெரிய மதுபான உரிமங்களைப் பெறுவதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளது. அது எதார்த்தத்தில் சாத்தியமே இல்லை.. எனவே 'மனமகிழ் மன்றம்' அல்லது 'கிளப்' என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் உரிமம் பெறப்படுகிறது. இதில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்பட வேண்டும் என்ற விதி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுதான் அடிப்படை விதி. ஆனால் டாஸ்மாக் போல் மனமகிழ் மன்றங்கள் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக செயல்படுவதாக புகார்கள் உள்ளது. அதுவும் எப்படி என்றால், டாஸ்மாக்கை விட சற்றே கூடுதலான விலை வைத்து அவை செயல்படுகின்றன. அத்துடன் நேரத்தை பொறுத்தவரை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குவதாக கூறப்படுகிறது.

1500 மனமகிழ் மன்றங்கள்

அதேநேரம் எத்தனை மனமகிழ் மன்றங்கள் உள்ளன என்பது பற்றி சரியான புள்ளி விவரங்கள் இல்லை. எனினும் கடந்த 2014ம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆண்டு தான் 500 மதுக்கடைகளை மூடினார்கள். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் 600 மனமகிழ்மன்றங்கள் திறக்கப்பட்டு முழுவீச்சில் மதுவணிகம் நடைபெறுகிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் முந்தைய ஆட்சிகளில் 900 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டிருந்தன. இப்போது திறக்கப்பட்டிருப்பதையும் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் 1500 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகளை விட அதிக எண்ணிக்கையில் மனமகிழ்மன்றங்களை திறந்து வைத்துக் கொண்டு படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பது ஏமாற்று வேலை" என்று கூறியுள்ளார். இந்த கணக்குப்படி பார்த்தால் சுமார் 1500 மனமகிழ் மன்றங்கள் செயல்படலாம் என கூறப்படுகிறது.

உயர்நீதிமன்றம் கேள்வி

இதனிடையே மனமகிழ் மன்றங்கள் திறப்புக்கு கடும் எதிர்ப்பு கிராமப்புறங்களில் எழுந்து வருகிறது. விதிகளை மீறி விற்பனை செய்யும் மனமகிழ் மன்றங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றமே அண்மையில் கடுமையாக கண்டித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், "மனமகிழ் மன்றங்கள் அமைக்க எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது? இரண்டு உடைந்துபோன கேரம் பலகைகளை வைத்துக்கொண்டு, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது.


மனமகிழ் மன்றம் எந்த விதியின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது

மனமகிழ் மன்றம் எந்த விதியின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது? பதிவு செய்யப்பட்ட மனமகிழ் மன்றங்களின் சட்ட திட்டங்கள் என்ன? அந்த மனமகிழ் மன்றங்களில் எத்தனை பேர் உறுப்பினர்களாக உள்ளனர்? அந்த உறுப்பினர்களுக்கு ஏற்ப மதுபானங்கள் விநியோகிக்கப்படுகிறதா? மனமகிழ் மன்றங்களை கலால் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கிறார்களா?" என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கான பதில்கள் கிடைத்தால் தான் , மனமகிழ் மன்றங்கள் குறித்த புதிர் வெளியே வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+