#Exclusive அண்ணாமலை ரெய்டு வரும்னு சொன்னா உடனே ரெய்டு நடக்குதே எப்படி? கி.வீரமணி பரபர பேட்டி!
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நமது ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். இந்தப் பேட்டியில், அண்ணாமலை, பாஜக குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் கி.வீரமணி.
கேள்வி: தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கு அடுத்து தொடர்ந்து தமிழக அரசியலை பரபரப்பாக வைத்திருப்பவர் அண்ணாமலை. அவரைப் பற்றியும் பாஜகவை பற்றியும் பேசாமல் கடந்து விட முடியுமா?
கி.வீரமணி: அண்ணாமலைக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது? அவர் ஒரு அதிகாரியாக இருந்தவர். அவருக்கு போஸ்டிங் கொடுப்பது போல அரசியலுக்கு பிளான் பண்ணி கொண்டு வந்திருக்கிறார்கள். எம்.எல்.ஏ ஆகக்கூட தகுதி இல்லாதவர் என மக்கள் புறக்கணித்து விட்டார்கள். பாஜகவினரே அண்ணாமலையை அங்கீகரிக்கவில்லை. அப்படிப்பட்டவருக்கு எதற்கு பதில் சொல்லி விளம்பரம் கொடுக்க வேண்டும்?

கேள்வி: அண்ணாமலை, அடுத்த மாதம் ரெய்டு வரும் என்று சொல்கிறார். அதன்படியே ரெய்டு வருகிறது. அந்தளவுக்கு அதிகாரம் மிக்கவராக இருப்பவருக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியுமா?
கி.வீரமணி: அண்ணாமலை சொன்னால் எப்படி உடனே ரெய்டு வருகிறது? ஆக, அண்ணாமலை, கொள்கையை வளர்த்து மண்ணுக்கோ மக்களுக்கோ நன்மை செய்ய வரவில்லை எனத் தெரிகிறது. பெரியார் காலத்தில் இருந்தே, தேவையற்றவர்களுக்கு பதில் சொல்வது வழக்கம் இல்லை. கர்நாடகாவில் அதிகாரியாகப் பணியாற்றியவர், எனவே பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தருவார் என கர்நாடகா சட்டசபை தேர்தலில் பொறுப்பாளராக நியமித்தனர். ஆனால் நடந்தது என்ன? இங்கு செய்வதை அங்கும் செய்தார். ஆனால் முடிவு எப்படி வந்தது? யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதை முடிவெடுப்பது அண்ணாமலையோ, ஊடகங்களோ அல்ல. பதில் சொல்பவர்கள் தான்.
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவரின் குரலை வலுப்படுத்தும் ஊடகத்தை குறை சொல்கிறீர்களே?
கி.வீரமணி: அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அதிமுக. அதிமுக தலைவரே அண்ணாமலை எதிர்க்கட்சி தலைவர் அல்ல, ஆனால், ஊடகங்களின் உதவியோடு எதிர்க்கட்சியைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார் என தெளிவாகக் கூறியுள்ளார். அண்ணாமலை பற்றி எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வேறு கேள்வி இருந்தால் கேளுங்கள்.

கேள்வி: அரசு இயந்திரத்திற்குள் ஆர்.எஸ்.எஸ் ஒரு மிகப்பெரிய ஊடுருவலை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இது இப்போது நடந்ததா? இல்லை நீண்ட காலமாக நடந்து வருகிறதா?
கி.வீரமணி: மோடி 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல மாநிலங்களிலும் இந்த ஊடுருவல் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஊடுருவல் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் அணுகுமுறைகளில் ஒன்று. மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிப் பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் தவறான பிரச்சாரத்தை விதைத்து, தங்களுக்கு அணுக்கமாகச் செயல்படும் வகையில் மாற்றி வருகிறது பாஜக.
மத வெறி, சாதி வெறி, அதிகார வெறியால் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் உள்ளே நுழைந்துள்ளன. அது மெல்லக் கொல்லும் நஞ்சு போலவும் வருகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசு அகலக் கண்களுடன் கண்காணித்து வருகிறது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அது நடக்கும்.












Click it and Unblock the Notifications