3 நாளில் முடிந்த ஆளுநரின் பிடிவாதம்! வென்றது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஜனநாயகப் போராட்டம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு வேறுவழியே இல்லாமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். ஜனநாயகத் திருநாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் நடத்திய மகத்தான ஜனநாயகப் போராட்டத்துக்கு கிடைத்த ஆகப் பெரும் வெற்றியாகவே இதனை பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
"மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசியலமைப்பின் 200வது விதியின்படி ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். 2வது, மசோதா சரியில்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். அது கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம். இதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது. மூன்றாவது மசோதா மீதான முடிவை எடுக்க குடியரசு தலைவருக்கு அதை அனுப்பி வைக்கலாம். ஆளுநர் மூன்றாவது வாய்ப்பை பயன்படுத்த காரணம், மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்திற்கு இணையாக ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தால் அது குறித்த முடிவை தான் எடுக்காமல் அதை இறுதி செய்வது குடியரசு தலைவர் என்பதால் அதை அவரது பார்வைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கிறார். குடியரசு தலைவர் அத்தகைய மசோதா மீது முடிவெடுக்க இரண்டு வாய்ப்புகளை பயன்படுத்தலாம். ஒன்று அவர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவார். இரண்டாவதாக அதை நிறுத்தி வைப்பார். விதிவிலக்காக இரண்டு வித மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது. ஒன்று அன்றாட செலவினம் தொடர்பான பண மசோதா. 2வது சட்டப்பேரவை அதன் வரம்புக்கு உட்படாத மசோதாவை நிறைவேற்றியதாக ஆளுநர் கருதினால், தமது கருத்துக்களுடன் அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பலாம். அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு மீண்டும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் ஆளுநரின் அரசியலமைப்பு நிலைப்பாடு. அரசியல் ரீதியாக மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும்போது ஆளுநர் பதவி வகிப்பவர், அரசியல் ரீதியாக செயல்படுகிறாரோ என்ற பார்வை இருக்கும். அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசு தலைவர். அந்த வகையில் குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர். இதை அரசியலமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இதில் எந்த பிரச்சனையும் எழவில்லை. உங்களுடைய கடமையை நீங்கள் சரியாக ஆற்ற வேண்டும். அவ்வளவுதான்"

- இப்படித்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி சில நாட்களுக்கு முன்னர் நீண்ட பிரசங்கத்தை நிகழ்த்தி இருந்தார்.
தமிழ்நாடு ஆளுநரின் இந்த நீண்ட உரையானது பெரும் சர்ச்சையானது. தமிழ்நாடு ஆளுநரின் இந்த நிலைப்பாடு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் நடத்தின. இவ்வளவு ஏன் மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் கேபி முனுசாமி கூட ஆளுநரைக் கண்டித்திருந்தார்.
மேலும் தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டிக்கும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருந்தார். அதில் ஜனாதிபதியை திரும்பப் பெற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருப்பது போல மாநில சட்டசபைகளுக்கு ஆளுநரை திரும்பப் பெறுகிற இம்பீச்மெண்ட் அதிகாரம் வழங்கப்படுதல் தொடர்பாகவும் கோடிட்டுக் காட்டி இருந்தார்.
தமிழ்நாடு சட்டசபை முன்னவரான மூத்த அமைச்சர் துரைமுருகனோ இன்னும் ஒருபடி மேலே போய், ஆளுநரை மிகக் கடுமையாகவே சாடினார். பாஜகவிலேயே சேர்ந்து கொள்ளலாமே என சாடியிருந்தார். அத்துடன் சென்னாரெட்டி மீது கல்லை விட்டு எறிந்து தாக்குதல் நடத்தியது போல நடந்து கொள்ளமாட்டோம் எனவும் கூறியிருந்தார் துரைமுருகன்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆளுநர் மாளிகைக்கானந நிதி ஒதுக்கீடு விவகாரங்களைப் பட்டியலிட்டார்.
அத்துடன் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து 4 மாதத்தில் இன்று 2-வது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இப்படி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் பாஜகவை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஆளுநருக்கு எதிராக வரிந்து கட்டி நின்றன.
இதனால்தான் என்னவோ, இன்று திடீரென ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு வேறுவழியே இல்லாமல் ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கிவிட்டார்.
அதேநேரத்தில் ஒரு மாநில சட்டசபையில் 2-வதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் அம்சம். இதனை ஆளுநர் ரவியும் உணர்ந்தே அண்மையில் பேசியிருந்தார். அதாவது "சட்டப்பேரவை அதன் வரம்புக்கு உட்படாத மசோதாவை நிறைவேற்றியதாக ஆளுநர் கருதினால், தமது கருத்துக்களுடன் அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பலாம். அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு மீண்டும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்" எனவும் ஆளுநர் ரவிதான் கூறியிருந்தார்.
இதனால் அரசியல் சாசன சிக்கல்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க இப்போது தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடை மசோதாவுக்கு ஒப்புதல் தநதுவிட்டார் ஆளுநர் ரவி! ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்சு ஜனநாயக வழியில் இடைவிடாது போராடினால் சாதிக்க முடியும் என்பதை தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு நிரூபித்துக் காட்டி இருப்பது மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டி- மாநில தன்னாட்சி அதிகார பயணத்தில் ஒரு முன்னத்தி ஏர்!












Click it and Unblock the Notifications