மாஸ் Operation! சென்னையில் இருந்தபடி.. உக்ரைனில் தமிழர்களுக்கு பஸ் ஏற்பாடு செய்த தமிழக அரசு! எப்படி?
சென்னை: உக்ரைனில் போர் பாதித்த பகுதிகளில் சிக்கி இருந்த தமிழக மாணவர்கள் சிலரை தமிழ்நாடு அரசு சென்னையில் இருந்தபடியே மீட்டு உள்ளது. இதற்காக சிறப்பான ஆப்ரேஷன் ஒன்றை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.
Recommended Video
உக்ரைனில் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு சார்பாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
உக்ரைனில் இருந்து அதிக அளவில் வடஇந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், தமிழர்கள், தென்னிந்தியர்களுக்கு மீட்பு பணியில் முன்னுரிமை கொடுக்கப்படுவது இல்லை என்று புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு இந்த குழுவை அமைத்துள்ளது.

தமிழக மாணவர்கள் உக்ரைன்
இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கரை தமிழ்நாடு குழு நேற்று சந்தித்தது. தமிழர்களை மீட்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்தனர். உக்ரைன் எல்லைக்கு செல்வது தொடர்பாக இவர்கள் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் உக்ரைன் மீட்பு பணிக்கு பேருந்து மற்றும் விமானங்களை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும், தென்னிந்தியர்களை வேகமாக மீட்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கரிடம் கோரிக்கை விடுத்தனர்.

உக்ரைன் மாணவர்கள்
உக்ரைனில் 2263 மாணவர்கள் உள்ளதாகவும், 717 தமிழக மாணவர்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் என்று இதில் தமிழக குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து கொண்டு உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்கள் 35 பேரை தமிழ்நாடு அரசு மீட்டு உள்ளது. அங்கு போர் காரணமாக பாதிக்கப்பட்ட Pisochyn என்ற உக்ரைன் நகரத்தில் தமிழர்கள் பலர் இருந்துள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆபரேஷன்
அதன்படி முதலில் போர் நடக்காத சாலை பகுதிகளை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ரோமானிய எல்லைக்கு எப்படி செல்வது என்று மேப் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி Pisochyn முதல் ரோமானியா அருகே இருக்கும் Ternopil பகுதிக்கு செல்வதே சிறந்த வழி என்று கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து பேருந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதான் சிக்கலான விஷயமே. இதற்காக உக்ரைனில் உள்ள கார்கிவ் பல்கலையில் மருத்துவம் படித்த டாக்டர் ஏபி விஜயகுமாரை அணுகி உள்ளனர். சென்னையில் இருக்கும் இவருக்கு உக்ரைனில் சிலரை தெரியும்.

பேருந்து ஏற்பாட்டு
அவர்கள் மூலம் உக்ரைனில் இரண்டு ஏஜெண்ட்டுகளை பிடித்து உள்ளனர். பின்னர் அந்த ஏஜெண்டுகளிடம் பேருந்துகளை ஏற்பாடு செய்ய பணம் கொடுத்து உள்ளனர். ஒரு மாணவருக்கு 500 டாலர் என்று 17500 டாலர் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு மூலம் சென்னையில் உள்ள ஐஓபி வழியாக இந்த பணம் வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த பேருந்து எடுக்கப்பட்டு அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டனர். நேற்று ஒரு நகரத்தில் பேருந்து சில மணி நேரம் நின்று இன்று மீண்டும் எல்லை நோக்கி புறப்பட்டு உள்ளது.

வெற்றிகரமாக மீட்பு
இன்று அந்த மாணவர்கள் எல்லோரும் ரோமானியாவிற்கு வந்து பின்னர் விமானம் ஏறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் எல்லோரையும் சென்னையில் இருந்தபடியே அரசு சத்தமின்றி மீட்டு உள்ளது. இந்த தகவல், திட்டம் அனைத்தும் வெளியுறவுத்துறைக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு, முழு அனுமதியோடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் மட்டுமின்றி வேறு சில மாநில மாணவர்களும் இதில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications