சென்னையில் நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் தங்கம் திருட்டு.. வேலைக்கார பெண் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலை பகுதியான காரப்பாக்கதில் வசித்து வருபவர் பிரபல நடிகர் கருணாகரன். இவர் கலகலப்பு, சூது கவ்வும், ஜிகர்தண்டா, இன்றுநேற்று நாளை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது வீட்டில் 60 பவுன் தங்க நகை திருட்டு போய் உள்ளது. இந்த விவகாரத்தில் கருணாகரனின் மனைவி அளித்த புகாரின் பேரில் வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் நடிகர் கருணாகரன். சுந்தர் சி.யின் கலகலப்பு திரைப்படத்தில் அறிமுகமான கருணாகரன், பீட்சா, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, சூது கவ்வும், ஜிகர்தண்டா, லிங்கா, இன்றுநேற்று நாளை, யாமிருக்கப் பயமே, கப்பல், இறைவி, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

காரப்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகை அண்மையில் திருட்டுப்போனது. இது தொடர்பாக கருணாகரன் மனைவி தென்றல், சென்னை கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பூட்டு, பீரோ உடைக்கப்படாததால் வெளி நபர்கள் வீட்டுக்குள் வரவில்லை என போலீசார் உறுதி செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் வீட்டில் உள்ளவர்கள், வேலை செய்பவர்களின் கைரேகையை போலீசார் ஆய்வு செய்தார்கள். இதில் வீட்டில் பணி புரியும், காரப்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயா (வயது 44) என்ற பெண் நகையை திருடியது உறுதியானது. இதையடுத்து வேலைக்கார பெண் விஜயாவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினி வீட்டிலும், கோவையில் நடிகை அதுல்யா ரவி வீட்டிலும் வேலைக்கார பெண்கள் திருடிய சம்பவம் நடந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் வேலைசெய்து வந்தனர். இவர்களுக்கு வீட்டில் நகை லாக்கர் வைக்கும் இடமும், அதற்கான சாவி வைக்கும் இடமும் தெரியும் . இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடினார்கள். 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்ட்டது.
அதுல்யா ரவி வீட்டினை பொறுத்தவரை, அவர் கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர். கடந்த 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அதுல்யா ரவி, வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த நான்கு மாதம் முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது.
இதையடுத்து விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி (46) என்பவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி (40) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். நடிகர், நடிகைகள் வீட்டில் இதேபோல் பல முறை திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications