ஆன்லைன் ரம்மி.. திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை நாடகத்தின் பகீர் பின்னணி.. உடைத்த போலீஸ்
சென்னை: ஆன்லைன் ரம்மி ஆடுவதற்காகவே சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டீக்காராம், மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகத்தை நடத்தியதாக ரயில்வே டிஐஜி ஜெயகெளரி தெரிவித்தார்.
Recommended Video
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்படவில்லை. இதனால் அங்கே காத்திருந்த பயணிகள், ரயில்வே போலீசாரிடம் டிக்கெட் கவுண்ட்டர் திறக்காதது பற்றி முறையிட்டனர்.
இதையடுத்து ரயில்வே போலீசார் கவுண்ட்டர் அருகே சென்று பார்த்த போது வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் உள்ளே சென்ற போது கவுண்ட்டர் ஊழியர் டீக்காராம் ஜன்னலில் கயிறுகளால் கட்டிப் போடப்பட்ட நிலையில் இருந்தார்.

துப்பாக்கி முனை கொள்ளை என நாடகம்
இது தொடர்பாக கேட்ட போது, கவுண்ட்டரை தாம் திறக்க வந்த போது 3 பேர் துப்பாக்கி முனையில் தம்மை கட்டிப்போட்டுவிட்டு ரூ1.32 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாக கூறினார். இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. சென்னை திருவான்மியூரில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் துப்பாக்கி சூடு
ஏற்கனவே திண்டுக்கல் புறநகரில் மீன்பிடி குத்தகை விவகாரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தலைநகர் சென்னையில் துப்பாக்கி முனையில் கொள்ளை என செய்தி பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

நாடகமாடியது அம்பலம்
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கவுண்ட்டர் ஊழியர் டீக்காராம், அவரது மனைவி இருவரும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை நாடகத்தின் பின்னணி
இது தொடர்பாக சென்னையில் ரயில்வே டிஐஜி ஜெயகெளரி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது ஜெயகெளரி கூறியதாவது: ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டீக்காரமனுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்றும் போயிருக்கிறார். இதனால் டீக்காராமுக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்தன. அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். அத்துடன் ஆன்லைனில் தொடர்ந்து ரம்மி விளையாடவும் கடன்களை சமாளிக்கவும் மனைவியுடன் சேர்ந்து கொள்ளை போய்விட்டதாக நாடகமாடியிருக்கிறார். அதிகாலையில் ரயில் நிலையத்துக்கு வந்த டீக்காராம் கவுண்ட்டரில் இருந்த ரூ1.32 லட்சம் பணத்தை மனைவியிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அவரையே கட்டிப்போட்டுவிட்டு போகவும்சொல்லி இருக்கிறார். டீக்காராம் வீட்டில் இருந்து ரூ1.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்ய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே டிஐஜி ஜெயகெளரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications