சர்க்கரை நோய் இல்லாத சமூகம்.. உருவாக்குவது எப்படி?.. இதோ வழிகள்! டாக்டர் பரூக் சொல்லும் டிப்ஸ்!
சென்னை: நீரிழிவு நோய் இல்லாத சமூகத்தை ஏற்படுத்த நாம் முதலில் அந்த நோய் இருப்பதை நம்ப வேண்டும் என சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீரிழிவு இல்லாத சமூகத்தை ஏற்படுத்த நாம் முதலில் நீரிழிவு என்றொரு நோய் இருப்பதையும் அது கடந்த இருபது ஆண்டுகளில் நம்மிடையே அதிகரித்து வருவதையும் நம்ப வேண்டும்.
சமூகமாக நாம் சில மாற்றங்களைச் செய்து நீரிழிவு குறித்த விழிப்புணர்வுடன் நாம் செயல்பட வேண்டும். நம் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு நீரிழிவு நோயாளியாவது இப்போது இருப்பார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சமூகமாக நம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது என்பது குறித்த எனது முன்மொழிவுகள் பின்வருமாறு :

உறவினர்கள் வீடுகள்
- வீடுகளுக்கு உறவினர்கள் வருகையில் முதலில் குளிர்பானங்கள் பகிரப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் உறவினர்களை சந்திக்கச் செல்லும் போது இனிப்பு கலந்து செய்யப்படும் பதார்த்தங்களை வாங்கிச் செல்வதை தவிர்த்து, செல்லும் வீட்டில் நீரிழிவு நோயர்கள் இருப்பின் சர்க்கரையை ஏற்றாத வண்ணம் நட்ஸ் வகைகள், கடலை, இனிப்பு சேர்க்காத ரஸ்க், கொய்யா காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை வாங்கிச்செல்லலாம்.

டீ காபி
- நமது வீடுகளில் டீ / காபி போன்றவை பகிரப்பட்டாலும் முதலில் சர்க்கரை அல்லது சீனி கலக்காமல் நீரிழிவு இருப்போருக்கு பகிர வேண்டும். அனைவரும் சீனி / சர்க்கரையை தவிர்ப்பது நலம்.
- ரயில் நிலையங்களில் ரயில் வண்டிகளில் முன் கூட்டியே சீனியை கலக்கி எடுத்து வரும் டின்களை தான் காண முடிகிறது. நீரிழிவு இருப்போருக்கென சீனி கலக்காமல் டீ/ காபி கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது. ஆம். இந்தியாவில் ஏழரை கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஒரு பயணச் சூழலை நாம் உருவாக்கினால் என்ன நட்டம் வந்துவிடப் போகிறது.

இலவச பரிசோதனை
- தங்களின் அலுவலகங்களில் வேலை செய்யும் முப்பது வயதுக்கு யேற்பட்டோருக்கு இலவசமாக வருடம் ஒருமுறையேனும் சில அடிப்படை ரத்த பரிசோதனைகளை நிர்வாக செலவில் செய்யலாம். அதன் மூலம் நீரிழிவை விரைவில் கண்டறிய முடியும்.
- அலுவலர்கள் மெடிக்கல் இன்சுரன்ஸ் எடுக்க அதில் வரும் ப்ரீமியம் தொகையை பாதி நிர்வாகமும் பாதி அந்த தொழிலாளரும் ஏற்கலாம். இனி வரும் காலம் மெடிக்கல் இன்சுரன்ஸ் காலமாகவே இருக்கப் போகிறது.

பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்குகள்
- நீரிழிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்குகளை பள்ளிகளில் , கல்லூரிகளில் அலுவலகங்களில் ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் எப்படி உணவு முறையை வாழ்வியலை அமைத்துக் கொள்வது என்பது பற்றிய சிந்தனையை மக்கள் மனதில் விதைக்க இயலும். நாம் சமூகமாக ஒன்று சேராமல் நீரிழிவை கட்டுப்படுத்த முடியாது. ஒன்றிணைவோம் ... வெல்வோம்... இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications