புது வீடு கட்டுறீங்களா.. இனி 100 யூனிட் மின்சாரம் இலவசமாக பெறுவது எப்படி? மாறிய மின்வாரிய விதிகள்
சென்னை: வாடகை வீட்டில் குடியிருப்போர் இலவசமாக 100 யூனிட் மின்சாரத்தை இனி பெறுவது எப்படி என்பது குறித்தும் புதிதாக வீடு கட்டி மின் இணைப்பு பெறுவோர் , அதில் பல வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தால் அதில் எப்படி 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாடுமின்சார வாரியம், மின் வாரியத்தில் ஏற்படும்இழப்புகளை தடுக்க கிடுக்குப்பிடி போட்டிருக்கிறது. ஏற்கனவே ஒரே பெயரில் பல மின் இணைப்பு பெற்றவர்களின் விவரங்களை அறிய ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் மூலம் ஒருவரின் ஆதார் எண்ணை வைத்து அவர் எத்தனை வீடு வைத்திருக்கிறார். அவர் எத்தனை மின் இணைப்பு வைத்துள்ளார். அவருக்கு வரும் மின் கட்டணங்களை எளிதாக அறிய முடியும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சொன்ன போதே பின்னாளில் ஏதோ ஒரு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே அறிவிப்பு வந்துள்ளது. வழக்கம் போல் இதில் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள், வாடகைக்கு குடியிருப்போர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இதில் ஒருவர் பெயரிலேயே பல மின் இணைப்பு வாங்கியவர்கள் மற்றும் அந்த வீடுகளில் வாடகை ஒப்பந்தம் போட்டு குடியிருப்போருக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் வழக்கம் போல் இலவச மின்சாரம் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது,.

இதுபற்றி நேற்று மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை. வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
வாடகை வீட்டில் குடியிருப்போர் வாடகை ஒப்பந்தததை காட்டி இலவசமின்சாரத்தை உறுதி செய்து கொள்ள முடியும் என்பது இந்த உத்தரவின் மூலம் தெரிய வருகிறது,. அதேநேரம் புதிதாக வீடு கட்டி மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்பவர்களுக்கு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி புதிய மின் இணைப்பு பெறுபவர்கள், கட்டாயம் வீட்டு உரிமையாளரின் ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். ஒரு வீட்டிற்குள், பல காம்பவுண்டு வீடுகள் இருந்தால் அதில் வசிப்பவர்களிடம் போடப்பட்ட வீட்டு ஒப்பந்தத்தை கண்டிப்பாக இணைக்க வேண்டும் அல்லது குடியிருப்பவரின் ரேஷன் கார்டு நகலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு வீட்டில் இருக்கும் பல குடியிருப்புகளுக்கும் 1ஏ திட்டத்தின் கீழ் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications