கொடைக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோருக்கு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த இ-பாஸ் பெற நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம் எனவும், விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றியும் தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோடைக்காலம் என்பதால் குளிர் பிரதேசமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அதிகளவில் மக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு நாளை மறுநாள் (மே 7) ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் நாளை மறுநாள் முதல் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையே தான் ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள் நாளை முதல் இ-பாஸ்க்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கோடைக்காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இப்படி கோடைக்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விபரங்களான பயணிக்கும் வாகனங்களின் பதிவெண், அவர்கள் வரும் நாள், தங்கும் காலஅளவு, தங்கம் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இ-பாஸ் அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப்பார்க்கவும் வரும் சுற்றுலா பயணிகள் முறையான இ-பாஸ்க்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை.
ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும்.
மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து 6.05.2024 காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற்று கொள்ளலாம். வெளிநாட்டு பயணிகள் தங்களுடைய இ-மெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டு பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும்போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும். மேலும் இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்கள் இந்த நடைமுறையினை வரும் 7.5.2024 முதல் 30.6.2024 வரை பின்பற்றுவார்கள். இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும், அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications