மல்கோவா மாம்பழம் சூப்பர் தான்.. ஆனா கெமிக்கல் மாம்பழங்கள் ரொம்பவே டேன்ஞர்! கண்டறிவது ரொம்பவே ஈஸி
சென்னை: கோடைக் காலத்தில் மாம்பழங்கள் விற்பனை உச்சத்தில் இருக்கும் நிலையில், எது கெமிக்கல் மாம்பழங்கள் எது இயற்கையான மாம்பழங்கள் என்பதைப் பார்க்கலாம்.
கோடைக் காலம் என்றாலே மாம்பழ சீசன் தான். இந்த காலகட்டத்தில் மல்கோவா மாம்பழம், சேலத்து மாம்பழம் என்று வகை வகையாக ரகரகமாக மாம்பழ சீசன் கலைக்கட்டும். மார்கெட்கள் முழுக்க மாம்பழங்களால் நிரம்பியே இருக்கும்.

அதேநேரம் சில வியாபாரிகள் மாம்பழங்கள் ரசாயன முறையில் பழங்களை வேகமாகப் பழுக்க வைக்கும் முறை அதிகரித்தே வருகிறது. இது குறித்த செய்திகளை நாம் பல இடங்களில் பார்த்து இருப்போம்.
மாம்பழங்கள்: பொதுவாக மாம்பழங்களில் வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கொட்டி கிடக்கும். மாம்பழங்களின் ருசியும் வேற லெவலில் இருக்கும் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமாக மாம்பழங்கள் இருக்கிறது. இருப்பினும், கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் நமது உடலுக்குப் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
எனவே, எது இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் எது கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். கடந்த 2013இல் இது தொடர்பாக நடந்த கருத்துக்கணிப்பில் சுமார் 78% பேர் எது கெமிக்கல் முறையில் பழுக்க வைக்கப்பட்டது எது இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டது என்ற வேறுபாட்டை அறிய முடியாமலேயே இருக்கின்றனர். இது அவர்களின் உடல்நிலையைக் கடுமையாகப் பாதிக்கும்.

கால்சியம் கார்பைடு: மாம்பழங்களுடன் கால்சியம் கார்பைடு வைக்கப்படும். அந்த ரசாயனம் ஈரப்பதத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அசிட்டிலீன் வாயு உற்பத்தியாகிறது. இயற்கையான முறையில் எத்திலீன் மூலம் பழுக்க வைக்கப்படுவது போலவே இது இருந்தாலும் கூட இது நமக்குப் பல மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கால்சியம் கார்பைடு (CaC2) பயன்பாட்டைத் தடை செய்துள்ளது.
இந்த கால்சியம் கார்பைடு புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் வெல்டிங்கில் பயன்படுத்தப்படுகிறது. இது மலிவானது என்பதால் பரவலாக இதுவே பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைட் விஷத்திற்கு வழிவகுக்கும்.. இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, பலவீனம், தோல் புண்கள், நிரந்தர கண் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும்.
எப்படிக் கண்டுபிடிக்கலாம்: மேலும், சில நேரங்களில் தலைவலி, தலைச்சுற்றல், தூக்கம், குழப்பம், நினைவாற்றல் இழப்பு, பெருமூளை எடிமா போன்ற பாதிப்புகளும் ஏற்படும். கால்சியம் கார்பைடு தவிர, எத்திலீன் பவுடர் போன்ற பல ரசாயனங்களும் கூட மாம்பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
எது கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டது எது இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டது என்பதே ஈஸியாக கண்டறியலாம்.. முதலில் மாம்பழங்களை ஒரு வாளி தண்ணீரில் போடவும், மாம்பழங்கள் தண்ணீரில் மிதந்தால், அவை ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. அவை மூழ்கினால், அவை இயற்கையானவை ஆகும்.
சீரான கலர்: வேதியியல் முறையில் பழுத்த மாம்பழங்களில், மேற்பரப்பு முழுக்க முழுக்க மஞ்சளாக இருக்கும். சில இடங்களில் மட்டும் அவை பச்சை நிற திட்டுகளைக் கொண்டிருக்கும். ஆனால், இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களில் பச்சையும் மஞ்சளும் ஒரே சீரான கலவையாக இருக்கும். இயற்கையான மாம்பழங்கள், கெமிக்கல் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களைப் போலல்லாமல், ஜூசியாக இருக்கும்.. அதேநேரம் கெமிக்கல் மாம்பழங்களில் உள்ளே சாறு குறைவாக இருக்கும்.
ஒரு மாம்பழம் செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டால், அதை உட்கொள்ளும் போது, சுவை மொட்டுகளில் எரிவதை உணருவீர்கள். சில நேரங்களில் மக்கள் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு கூட ஏற்படும். எனவே, கெமிக்கல் மாம்பழங்களைப் பார்த்தால் உடனே உணவு பாதுகாப்புத் துறைக்குப் புகார் அளிக்கவும்.












Click it and Unblock the Notifications