தீபாவளி வந்தாச்சு!.. லட்டு, அதிரசத்தை விடுங்க! சூப்பரான ஆளிவிதையை வைத்து சூப்பர் ஸ்வீட் செய்யலாமா?
சென்னை: தீபாவளிக்கு எப்ப பார்த்தாலும் அதிரசம், லட்டுவையே செய்து செய்து போர் அடிக்கிறதா! கவலைய விடுங்க! புது விதமான ரெசிபியை செய்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடுங்கள்.
தீபாவளி பண்டிகை என்பது வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் பட்டாசு, புத்தாடைக்கு பிறகு பலகாரங்கள் முக்கிய இடம்பிடிக்கின்றன. அதிலும் அக்கம்பக்கத்தார் உற்றார் உறவினர்களுடன் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது மகிழ்ச்சியாக இருக்கும்.

இனிப்பு என சொல்லும் போது தற்போது கால மாற்றத்திற்கேற்ப குழந்தைகளின் டேஸ்ட் மாறுபடுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுமையை புகுத்தி அவர்களையும் குதூகலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பொதுவாக இனிப்பு என்றால் லட்டு, சோமாசி, ரவா லட்டு, அதிரசம். பாதுஷா, முந்திரி கேக் உள்ளிட்டவைகள்தான் பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும். ஆனால் வருஷா வருஷம் இதையே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிப்பதாக குழந்தைகள் கூறுகிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் செய்து கொடுக்க பெற்றோர் மெனக்கெடுகிறார்கள்.
தற்போது உற்பத்தியாகும் உணவு பொருட்களில் பெரும்பாலும் கலப்படமும் ரசாயனமும் இருப்பதால் ஆர்கானிக் முறையில் தயாராகும் உணவு பொருட்கள் மூலம் குழந்தைகளுக்கு உணவை தயாரித்து கொடுக்கிறார்கள். அது போல் சிறுதானியங்களும் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு புது விதமாகவும் அதே சமயத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வகையிலும் ஒரு இனிப்பை பலர் தயார் செய்து வருகிறார்கள். ஒரு இனிப்பு செய்ய அடிப்படையாக ஒரு பொருளை வைத்துக் கொண்டு அதனுடன் பல பொருட்களை சேர்த்து இனிப்பு செய்கிறார்கள்.
அந்த வகையில் ஆளிவிதைகள் (ஒரு கப்), வரகு மாவு (அரை கப்), கம்பு மாவு (அரை கப்), முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, கருப்பு அல்லது பச்சை உலர் திராட்சை, நெய், ஏலக்காய், நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி (1 கப்) ஆகியவற்றை வைத்து அற்புதமான லட்டு செய்யலாம். கம்பு உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும், வரகு அரிசியில் நார்ச்சத்து உள்ளது. கருப்பட்டி உடலுக்கு நன்மை கொடுக்கும்.
பாதாம், பிஸ்தா, முந்திரியில் புரதம் உள்ளது, சர்க்கரையை கட்டுப்படுத்தும் காரணிகள் உள்ளன. குழந்தைகளின் கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அது போல் ஏலக்காய் வாசனை திரவியம் ஆகும். ஆளி விதைகளில் ஓமேகா பேட்டி ஆசிட்கள் உள்ளன. அது போல் நிறைய தாதுக்களும் தாமிரமும் உள்ளது. இது கேன்சருக்கு எதிராக போராடும்.
அந்த நோய் வராமலேயே தடுக்கும். இந்த ஆளி விதைகள் கர்ப்பப்பை நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இப்படி நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட இந்த இனிப்பை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். ஆளி விதையை வாசனை வரும் வரை வறுத்து பொடித்துக் கொள்ளவும். அது போல் கம்பு மாவு, வரகு மாவையும் நெய்யில் வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாம், பிஸ்தாவை நெய்யில் வறுக்கவும்.
பின்னர் கருப்பட்டியை பாகு எடுத்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து வைத்துக் கொண்ட பொருட்களுடன் வெல்ல பாகை சேர்க்க வேண்டும். பிறகு நன்கு கிளறி சிறிய சிறிய லட்டுகளாக பிடித்து வைத்துக் கொள்ளலாம். இதை 10 நாட்கள் வைத்திருந்தாலும் கெடாது. இது போல் உருண்டைகளை செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு பள்ளி விட்டு குழந்தைகள் வந்தபிறகு கொடுக்கலாம். இதில் வித்தியாசமான உணவு பொருட்களை சேர்த்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications