பிறப்பு சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்
சென்னை: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.தற்போது வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டும் எனில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளை தேடிச் செல்ல வேண்டும்.இனி யாரும் அலைய வேண்டியதே இல்லை, பிறப்பு இறப்பு சான்றிதழ்களை எளிதாக வாட்ஸ் அப் மூலம் பெறலாம்..
பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. முதன்முறையாக வாட்ஸ் அப் உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இது பற்றி தமிழக அரசு கூறிய தகவல்களை பார்ப்போம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் ஒரு புரட்சிகரமான மைல் கல்லாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையை மாநிலத்தின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாடான உமாஜின்- 2026 நிகழ்வில் அறிமுகப்படுத்தி உள்ளது. "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையின் மூலம், பொதுமக்கள் அரசு சேவைகளைத் தங்களது செல்போன் வழியாகவே எளிதாகப் பெற முடியும். இதன் மூலம் இணையதள வழிமுறைகள் மூலம் ஏற்படும் சிரமங்களோ அல்ல அப் எண்ணின் மூலம் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "நம்ம அரசு'' திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மெட்டா இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அருண் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் முதல்கட்டமாக உள்ளாட்சித்துறை சேவைகள், இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பக்தர்களுக்கான சேவைகள், மின்சார வாரிய கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படுகின்றன. மக்களின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், "நம்ம அரசு'' தளத்தில் மேலும் பல துறை சார்ந்த சேவைகளை படிப்படியாக இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் முன்னிலையில் வாட்ஸ் அப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் (whatsapp) எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம் என்று மெடா நிறுவனத்தின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறுகையில், "மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். அதோடு கால தாமதமின்றி விரைவிலேயே சான்றிதழ்கள் கிடைப்பது தான் இதன் முக்கிய நோக்கம். சான்றிதழ் தொடர்பான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொதுமக்கள் குறுந்தகவல் அனுப்பிய ஒரு சில நாட்களில் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பப்படும்" என்றார். எனவே 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக எளிதாக பிறப்பு சான்றிதழை பெற முடியும். தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சியாக இந்த சேவை பார்க்கப்படுகிறது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து சான்றிதழ்களையும் வாங்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications