தேசிய பல்கலைக்கழகங்களில் சட்டம் படிக்க வேண்டுமா? எங்கு படிக்கலாம்? தேர்வு முறை எப்படி இருக்கும்?
சென்னை: 12ஆம் வகுப்பிற்கு பின் மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் இன்னொரு புறம் குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் சட்டப்படிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கு சமூக காரணங்களும் உள்ளன. ஏனென்றால் அதிகாரங்கள் குவிந்துள்ள இடங்களில் வழக்கறிஞருக்கு கிடைக்கும் மரியாதை அளவிட முடியாதது.
சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்த பின் சட்டப்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம். பிஏ, எல்எல்பி அல்லது பிஎஸ்சி எல்எல்பி என்று 5 ஆண்டுகள் கொண்ட கோர்ஸாக இருக்கும். ஒருவேளை ஏற்கனவே டிகிரி வைத்திருப்பவர்கள் எல்எல்பி 3 ஆண்டு கோர்ஸாக படிக்கலாம். அதேபோல் தேசிய பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

வழக்கறிஞராவது எப்படி?
மருத்துவம் படிக்க எப்படி நீட் தேர்வு எழுதுகிறார்களோ, அதேபோல் 24 தேசிய பல்கலைக்கழகங்களில் சட்டம் படிக்க கிளாட் தேர்வு எழுத வேண்டும். Consortium of National Law Universities இந்த தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வினை எழுதுவதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது. அதேபோல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவிகித மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
தேர்வு முறை என்ன?
இந்த தேர்வில் 120 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம், பொது அறிவு, நாட்டு நடப்பு, லாஜிக்கல்ஸ், லீகஸ் ஆப்டிட்யூட் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இருக்கும். இதன் பின் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் மூலமாக சட்டக் கல்லூரிகள் சேரலாம். இந்திய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களாக 7 பல்கலைக்கழகங்கள் இருக்கிறது.
சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?
பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டி, டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகம், ஐதராபாத்தில் உள்ள நல்சர் யுனிவர்சிட்டி ஆஃப் லா, புனேவில் உள்ள சிம்பயாசிஸ் லா ஸ்கூல், மேற்கு வங்கத்தில் உள்ள வெஸ்ட் பெங்கல் நேஷனல் யுனிவர்சிட்டு ஆஃப் ஜுரிடிசியல் சயின்ஸ், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா, டெல்லி அமிட்டி லா ஸ்கூல் ஆகியவை சிறந்த பல்கலைக்கழகங்களாக பார்க்கப்படுகிறது.
பணிகள்
சட்டம் படித்து முடித்தபின் கிரிமினல் வழக்கறிஞர், கார்ப்பரேட் வழக்கறிஞர், சிவில் வழக்கறிஞர், பப்ளிக் பிராசிக்யூட்டர்ஸ், நிறுவனங்களுக்கான லீகல் அட்வைசர், லீகல் அகாடமியா, பத்திரிகையாளர் ஆகிய பணிகள் செய்ய முடியும். இது தவிர்த்து அரசுத் தேர்வுகள் எழுதி பணிக்கு செல்ல முடியும். இதில் மகளிருக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications