கோர்ட்டுக்கு வெடிகுண்டு கொண்டு வந்தது எப்படி? ஆம்ஸ்ட்ராங் கொலையில் உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னயைில் உள்ள வீட்டின் அருகே சிலருடன் பேசி கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை வெட்டி கொன்றது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் 26 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸை சேர்ந்தவர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி மட்டும் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 11 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அதற்கான பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்படவில்லை எனவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்துள்ளதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
இதற்கு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜி.மோகன கிருஷ்ணன், ஹமீது இஸ்மாயில், முத்தமிழ் செல்வக்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் ஒத்திவைக்க கோருவதாகவும் இறுதி விசாரணை தேதியை நிர்ணயிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? அது தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா? என கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இறுதி விசாரணைக்காக வழக்குகளை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications