திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சுற்றி வளைக்கப்பட்ட தாசில்தார்.. சிக்க வைத்த பிரபல கம்பெனி
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீட்டு தொகையை விடுவிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி தாசில்தார் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை அரசு பல்வேறு வழித்தடங்களில் மேற்கொண்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அப்படி நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர், நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இழப்பீடு தொகை
அந்த வகையில் திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை தமிழக அரசு நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தியது. அரசு அதற்காக சுமார் ரூ.48 லட்சம் இழப்பீடு தொகையாக கொடுக்க வேண்டியிருந்தது.
இத்தொகையை பெற பலமுறை திருவள்ளூர் நில எடுப்பு தனி தாசில்தார் எட்வர்ட் வில்சன் (வயது 50) என்பவரிடம் அந்த நிறுவனத்தின் மேலாளரான திருவொற்றியூர் சார்லஸ் நகரை சேர்ந்த ஆஸ்டின் ஜோசப் (31) அணுகியுள்ளார்.
1 லட்சம் லஞ்சம்
பலமுறை சென்று வலியுறுத்திய போதும், நில எடுப்பு தொகையை விடுவிக்கவில்லையாம். திருவள்ளூர் தனி தாசில்தார் எட்வர்ட் வில்சன் காலதாமதம் செய்து வந்தாராம். இந்த நிலையில் ரூ.1 லட்சம் கொடுத்தால் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீடு தொகையை விடுவிக்க முடியும் என தாசில்தார் வில்சன் குறிப்பிட்ட நிறுவனத்தினரிடம் கூறினாராம்.
இடைத்தரகர்கள் கைது
இதனால் கோபம் அடைந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் ஆஸ்டின் ஜோசப் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திருவள்ளூர் நில எடுப்பு தாசில்தாரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.75 ஆயிரம் பணத்தில் ரசாயனபொடி தடவி மேலாளர் ஆஸ்டின் ஜோசப்பை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசின் ஆலோசனைப்படி, போளிவாக்கத்தில் உள்ள கம்பெனிக்கு ஆட்களை அனுப்பும்படி தனி தாசில்தார் எட்வர்ட் வில்சனிடம், ஆஸ்டின் ஜோசப் கூறியிருந்தாராம். அதன்படி திருவள்ளூர் தனி தாசில்தார் வில்சனுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த கோமதிநாயகம் (52) மற்றும் வெள்ளத்துரை (48) ஆகியோர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
தனி தாசில்தார் கைது
இதையடுத்து கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகிய இருவரும் ரசாயனம் தடவிய ரூ.75 ஆயிரத்தை வாங்கினார்களாம். அப்போது அங்கு மறைந்திருந்த திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மாலா, தமிழரசி ஆகியோர் அவர்களை பாய்ந்து வந்து, கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து லஞ்ச ஒழிப்பு போலீசார்,அங்கு பணியிலிருந்த தனி தாசில்தார் வில்சனையும் அதிரடியாக கைது செய்தனர். தனி தாசில்தார் வில்சனிடம் சாலை அமைக்க நிலம் கொடுத்தவர்களிடம் இதுவரை எவ்வளவு லஞ்சம் வாங்கியது எவ்வளவு என்று விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications