அது மட்டும் நடந்திருந்தால்.. ஐயயோ.. பெரிய தலைவலியாச்சே.. இனி டாப் கியர் போடலாம்.. குஷியில் திமுக!
சென்னை: அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த அறிவிப்பின் மூலம் திமுகவில் பல தலைவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் ஒரு திரை பிம்பம். அவர் வருகையால் அதிமுகவுக்குத்தானே பாதிப்பு ஏற்பட முடியும். திமுகவுக்கு எப்படி இருக்க முடியும் என்று.. இன்று, நேற்று அரசியல் களத்தை பார்ப்பவர்கள் வேண்டுமானால் கேட்கலாம்.
ஆனால் இதோ நடந்து முடிந்த கடந்த சட்டசபை தேர்தலை உன்னிப்பாக கவனித்தவர்கள் கூட கண்டிப்பாக அப்படி கேட்கவே மாட்டார்கள். ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது திமுகவுக்கு எவ்வளவு பெரிய நன்மை என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
வாழ்த்துகள்.. நலம் பெற வாழ்த்துகள்... (மிஸ்டர்) ரஜினி.. ஒரு ரசிகனின் மனம் திறந்த மடல்
சில மாதங்கள்தான்
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நாலைந்து மாதங்கள்தான் இருக்கிறது. அதற்குள்ளாக, புதிதாக ஒரு கட்சியைத் துவங்கி பதிவு செய்து, தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்று, மக்கள் மத்தியில் சின்னத்தை கொண்டு சென்று சேர்த்து, ஒவ்வொரு பூக்களுக்கும் ஏஜெண்டுகளை போட்டு, அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான வேலை கிடையாது. அப்படி இருந்தும், கட்சி துவங்குவதற்கு ரஜினிகாந்த் தயாரானார் என்றால், அதன் பின்னணி காரணம் வேறு இருக்கிறது.
ஓட்டுக்கள் பிரிவது பெரிய சவால்
ஆமாம்.. முடிந்த அளவுக்கு பல தொகுதிகளிலும் ஓட்டுக்களை பிடித்துவிட்டால் போதும். கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட கூட்டணி ஆட்சியை அமைத்து விடமுடியும். பெரிதாக கஷ்டப்படாமல் எளிதாக வெற்றி பெறும் வழி இதுதான். இப்படி ஓட்டுக்கள் பிரிவதுதான் திமுகவுக்கு பெரிய பாதகம். நாம் ஏற்கனவே சொன்னபடி, திமுக கட்சிக்காரர்கள் திரை பிம்பம் என்பதை மட்டுமே பார்த்து ஓட்டு போடுவது கிடையாது. எனவே திமுகவுக்கு தொடர்ந்து ஓட்டு போடுபவர்கள் ரஜினிக்கு போடப் போவது கிடையாது. ஆனால், கட்சி சார்பற்ற, பொதுமக்கள் என்ற பிரிவில் வருவோர், நடுநிலையாளர்கள், பெண்கள் ஓட்டுக்கள் திமுகவுக்கு முழுமையாக வராமல் ரஜினி பக்கம் திரும்பும் போது திமுக வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது.
மக்கள் நல கூட்டணி
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது விஜயகாந்த் தலைமையில் தேமுதிக, வைகோவின் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்தன. அவர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் திமுகவுக்கு செல்ல வேண்டிய ஓட்டுகளை பிரித்தனர். அதன் விளைவாக அதிமுக.. எம்ஜிஆர் காலத்துக்குப் பிறகு முதல்முறையாக.. அடுத்தடுத்த தேர்தல்களில் அரியணை ஏறியது. இரு கூட்டணிகளும் நடுவேயான ஓட்டு வித்தியாசம் வெறும் ஒரு சதவீதம் மட்டும்தான்.
திமுக ரூட் கிளியர்
மக்கள் நல கூட்டணி இதைச் செய்ய முடியும் எனும்போது, ரஜினி போன்ற அனைத்து மக்களாலும் எளிதாக அறியப்பட்ட ஒரு நபர் இதைச் செய்ய முடியாதா? அப்படி செய்தால், தொடர்ந்து மூன்றாவது சட்டசபை தேர்தலில் திமுக தோற்க வேண்டி வருமே. அந்த நிலை வந்தால், திமுக எதிர்காலம் என்ன ஆகும்? என்ற பல்வேறு கேள்விகள் அந்த கட்சி தலைவர்கள் சிலருக்கு இருந்தது. இப்போது அந்த ரூட் முற்றிலும் கிளியர் ஆகிவிட்டது.
தர்ம சங்கடங்கள்
ரஜினிகாந்த் இப்போது நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. திரைப்படம் வெளியாகும் வரை திமுக குடும்பத்தைச் சேர்ந்தவரை தலைவராக கொண்ட, சன் பிக்சர்ஸ் குழுமம் ரஜினிக்கு எதிராக எந்த ஒரு செய்திகளையும் ஒளிபரப்ப முடியாது. அது மட்டும் கிடையாது. ரஜினியை விளம்பரப்படுத்தும் வகையில்தான் பட விளம்பரத்தை வெளியிட வேண்டி வரும். திமுகவில் அங்கம் வகிக்கக்கூடிய மாறன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஊடகத்தில் இன்னொரு கட்சித் தலைவரை தூக்கி விடுவதுபோல விளம்பரம் வந்து கொண்டிருந்தால் அது மிகப்பெரிய தர்மசங்கடமாக இருந்திருக்கும். இப்போது திமுகவுக்கு அந்த தர்மசங்கடமும் தீர்ந்து போய்விட்டது. அதிமுகவுடன் நேரடியாக போட்டியிட்டால் போதும், வேறு எதைப்பற்றியும் கவலை வேண்டாம், கவனச் சிதறல்கள் கிடையாது, என்று ரூட் கிளியரான மகிழ்ச்சியில் இருக்கிறது திமுக.