சோப்பு கம்பெனி பஞ்சாயத்து..ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசிய அஸ்வத்தாமன்! போனை போட்ட நாகேந்திரன்..என்ன நடந்தது?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோப்பு கம்பெனி நிலத்தகராறு மற்றும் ஏற்கனவே இரு தரப்பினரிடையே பிரச்சனைகள் குறித்து இருவரிடமும் ஒரே கேள்வியை கேட்டு எப்படி பதில் அளிக்கிறார்கள் என போலீசார் வீடியோ எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் சோப்பு கம்பெனி நிலத்தகராறு மற்றும் ஏற்கனவே இரு தரப்பிடையே பிரச்சனைகள் குறித்து இருவரிடமும் ஒரே கேள்வியை கேட்டு எப்படி பதில் அளிக்கிறார்கள் என போலீசார் வீடியோ எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரிடமும் ஒரே கேள்வியை கேட்டு, அவர்கள் ஒரே பதிலை அளிக்கிறார்களா அல்லது வேறு வேறு பதில் அளிக்கிறார்களா என போலீசார் சோதித்துள்ளனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் சோப்பு நிறுவனம் ஆக்கிரமித்து இருந்த 157 ஏக்கர் நிலம் தொடர்பாகவும் போலீசார் விசாரித்துள்ளனர். அதில் பல தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதாவது சோப்பு கம்பெனி ஆக்கிரத்திருந்த நிலத்தின் பத்திரம் இல்லாத நிலையில். பத்திர பவர் மூலம் சிலர் அதனை விற்க முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த இடத்தை விற்க ஆர்ம்ஸ்ட்ராங் கட்சியைச் சேர்ந்த சேகர் என்பவர் உதவிக்காக கூறப்படுகிறது/
இந்த நிலையில் அதில் சுமார் 15 ஏக்கர் நிலம் புறம்போக்கு இருப்பதாக பிரச்சனை எழுந்திருக்கிறது. இதில் தலையிட்ட காங்கிரஸ் முன்னால் நிர்வாகியும் ரவுடி நாகேந்திரனின் மகனுமான அஸ்வத்தாமன், நிலம் விற்பவர்களை மிரட்டி பணம் கேட்டதாக தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் சேகர் மூலம் தலையிட்டு இருக்கிறார். இதை அடுத்து சிறையில் இருந்தபடியே ரவுடி நாகேந்திரன் தொலைபேசியில் ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் அஸ்வத்தாமனும் ஆம்ஸ்ட்ராங்கை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறையடுத்தே நாகேந்திரன் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து எத்தனை முறை ஆம்ஸ்ட்ராங் இடம் பேசப்பட்டது, கொலைக்கு எப்படி திட்டம் தீட்டப்பட்டது , சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியது எப்படி? கொலையாளிகளை ஒருங்கிணைத்தது எப்படி? அவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல ரவுடிகளான சம்பவம் செந்தில் மற்றும் சீசிங் ராஜா குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications