இன்று மிஸ் பண்ணிடாதீங்க! சென்னை உட்பட 8 மாவட்டங்களில் PF குறைதீர்ப்பு முகாம்.. இதோ லொகேஷன் டீடைல்ஸ்
சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இபிஎஃப்ஓ மற்றும் இஎஸ்ஐ அமைப்புகள் இணைந்து, சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று ஏப். 27ம் தேதி மாபெரும் குறைதீர்ப்பு முகாம்களை நடத்துகின்றன. "வைப்பு நிதி உங்கள் அருகில்" என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த முகாம்களில், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகாலப் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட உள்ளது. குறிப்பாக புதிய நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல் போன்ற முக்கிய சேவைகள் இந்த முகாமில் வழங்கப்பட உள்ளன.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இபிஎஃப்ஓ (EPFO) மற்றும் இஎஸ்ஐ (ESI) அமைப்புகள் இணைந்து, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக மாபெரும் குறைதீர்ப்பு முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

"வைப்பு நிதி உங்கள் அருகில்" முகாம்
"வைப்பு நிதி உங்கள் அருகில்" (Nidhi Aapke Nikat) என்ற பெயரில் நடைபெறும் இந்த முகாம்கள், இன்று திங்கட்கிழமை காலை 9.15 மணி முதல் மாலை 5.45 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளன. சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இந்த முகாம் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் பெரும் பயன் அளிக்கும் வகையில் அமையும்.
பிஎப் கணக்கு வைத்திருப்போருக்கு சூப்பர் சான்ஸ்
சென்னையில் இரண்டு இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. உத்தண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள பிவிஆர் ஹெரிடேஜ் (SRL ECR) வளாகத்தின் முதல் தளத்திலும், அண்ணாநகர் ஆறாவது பிரதான சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி மகளிர் கல்லூரியிலும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள முகப்பேர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க வளாகத்தில் முகாம் நடைபெறுகிறது.
பென்ஷன் - குறைகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஹுண்டாய் மொபிஸ் இந்தியா லிமிடெட் வளாகத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பட்டர் ஃபிளை காந்தி மதி அப்ளையன்ஸ் லிமிடெட் நிறுவன வளாகத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமின் முக்கிய நோக்கம், தொழிலாளர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு இடையே உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதும், அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வை வழங்குவதும் ஆகும். குறிப்பாக, புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள், அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படும்.
ஒரே நாளில் தீர்வு
மேலும், முதன்மை உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றியும் இந்த முகாமில் எடுத்துரைக்கப்படும்.
விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் (Exempted Establishments) நேரடி கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். மிக முக்கியமாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் நீண்டகாலப் புகார்கள் மற்றும் குறைகளுக்கு இந்த முகாமில் உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் 'டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை' (Digital Life Certificate) எளிய முறையில் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
இன்று 8 மாவட்டங்கள்
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டு, மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கு தொடர்பான சிக்கல்கள், ஓய்வூதிய நிலுவைத் தொகை, அல்லது நிறுவனங்கள் தரப்பில் உள்ள குளறுபடிகள் குறித்துப் புகார் அளிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். நாளை காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெறும் இந்தச் சேவையைப் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications