என்னங்க சொல்றீங்க? அறைக்குள் வாக்குவாதம்.. கோபமாக வெளியேறிய அதிமுக தலைகள்! அப்பாவு சொன்னது என்ன?
சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் இன்று உச்சம் அடைந்து உள்ளது. சபாநாயகர் அப்பாவு அறையில் இதற்காக கடும் விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசியலில் கடந்த சில நாட்களாக இந்த இருக்கை விவகாரம் கவனம் பெற்றது. முன்னதாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதியது.

ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இதனால் இன்று தமிழ்நாடு சட்டசபையில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இதுவரை இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். இருக்கை மாற்றம் குறித்து பேச இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றது. சபாநாயகர் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எஸ்.பி வேலுமணி தரப்பு.. நாங்கள் 6 முறை கடிதம் அனுப்பி இருக்கிறோம். நான் கொறடாவாக இரண்டு முறை கடிதம் அனுப்பி இருக்கிறேன்.
ஆனால் இன்னும் எதிர்க்கட்சி துணை தலைவரை ஏன் மாற்றவில்லை. நாங்கள் வைத்த கோரிக்கையை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கும் போது மாற்றுவது தானே சரியாக இருக்கும் என்று கேட்டுள்ளார். ஏன் இப்படி தாமதம் செய்கிறீர்கள்.. இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று அதிமுகவினர் கேட்டுள்ளனர். ஆனால் இதை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை, நான் சட்டப்படிதான் முடிவு எடுக்க முடியும்.
நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று என்னை நீங்கள் கட்டாயப்படுத்த கூடாது. சட்டசபை விதிகளுக்கு ஏற்றப்படிதான் நான் முடிவு எடுக்க முடியும் என்று கூறினார். இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் அங்கு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்பாவுவை சுற்றி நின்று தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து உள்ளனர். ஆனால் இதற்கு எல்லாம் அப்பாவு அசைந்து கொடுக்கவில்லை.
அனைத்தையும் அமைதியாக அவர் கேட்டுக்கொண்டு இருந்துள்ளார். அதன்பின் என்னுடைய முடிவை நான் சபாநாயகர் அறையில் சொல்ல முடியாது. சொல்ல கூடாது. நீங்கள் சட்டசபைக்கு வாருங்கள். சட்டசபையில் நான் என் முடிவை அறிவிக்கிறேன். ஏன் அந்த முடிவை எடுத்தேன் என்றும் அறிவிக்கிறேன் என்றும் கூறி உள்ளனர்.
இதனால் அதிமுக நிர்வாகிகள் உடனே கோபம் அடைந்தனர். அப்பாவுவை கும்பிட்டுவிட்டு அங்கிருந்து எஸ்.பி வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் நேரடியாக சென்று 4வது நுழைவாயிலில் காரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அதன்பின்தான் எடப்பாடி பழனிச்சாமி அப்பாவுவை சந்திக்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நேற்று பேட்டி அளித்த அப்பாவு, ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கடிதத்திற்கு நான் என்ன பதில் அளித்தேன் என்று சொல்ல முடியாது. அந்த ரகசிய விஷயங்களை நான் பேட்டியில் குறிப்பிட முடியாது. அது சட்டப்படி பொருத்தமாக இருக்காது. ஆனால் நான் என் பதிலை சட்டசபையில் தெரிவிப்பேன். 6 கடிதங்களுக்கும் என்ன சொன்னேன் என்பதை சட்டசபையில் தெரிவிப்பேன். நாளை இதை பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பினால் பதில் கொடுப்போம். ஏன் இப்படி எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றவில்லை என்று சட்டசபையில் நாளை யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு பதில் அளிப்பேன், என்று கூறினார்.












Click it and Unblock the Notifications