தலை நிமிரும் சென்னை.. இன்னும் ஒரே மாசம்! நாய்க்கடி டேஞ்சர் இருக்காது.. புளியந்தோப்பில் பார்த்தீங்களா
சென்னை: சென்னையில் 3 இடங்களில் ரூ.20 கோடியில் விலங்கு இன கட்டுப்பாட்டு மையம் உலகத்தரத்துடன் தயாராகி வருகிறது.. இதற்கான பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபடியே வருகிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த வாரம் 2 வளர்ப்பு நாய்கள். சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவ அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் இன்னமும் மீளவில்லை.. அந்த குழந்தையின் தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கியது.. இந்த சம்பவம் முடிந்த அடுத்த நாட்களிலேயே, சென்னையில் நாய்கள் கடித்து சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகள்: இதையடுத்து, சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளிலும், பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையிலும் இறங்கியது... அதன்படி, இனிமேல் நாய் வளர்க்க பிரியப்படுகிறவர்கள் உரிமை பெற வேண்டும், இல்லாவிட்டால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தது.
ஆனாலும், சென்னையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது... நாய்களை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருப்பதால், நாய்கள் பெருக்கத்தையும், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளையும் கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சியும் விழிபிதுங்கி வருகிறது.
கருத்தடை : ஏற்கனவே, புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை போன்ற இடங்களில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான இனக்கட்டுப்பாட்டு மையங்கள் மாநகராட்சி சார்பில் இயங்கி வருகின்றன.. ஆனால், இந்த மையங்களில் நவீன அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையில், நாய்களுக்கு வெறும் கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும். அதுவும், வருடத்துக்கு சுமார் 16 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை ஆபரேஷன் செய்ய முடியும்.
இதனால், நாய்களின் இனப்பெருக்கத்தை பெருவாரியாக தடுக்க முடிவதில்லை.. எனவேதான், சென்னையில் புதிதாக விலங்கு இனக் கட்டுப்பாட்டு மையங்களை ரூ.20 கோடியில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம்.. அந்தவகையில், மேற்கூறிய 3 இடங்களில் உலகத்தரத்தில் இந்த விலங்கு இனக் கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கும் பணிகள் துரிதமாகி வருவதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டு மையம்: இந்த கட்டுப்பாட்டு மையம் கட்டி முடிக்கப்பட்டால், வருடத்துக்கு 27 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய முடியுமாம். அத்துடன், வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ள முடியும்.
புதிதாக கட்டப்படும் இந்த 3 மையங்களில், துரு பிடிக்காத உலோகத்தாலான 460 கூண்டுகள் உட்பட லேப், எக்ஸ்ரே, ஸ்கேன் சென்டர்கள், செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் போன்றவை இடம்பெற போகிறதாம்.. எப்படியும் வரும் ஜூலைக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications