பள்ளி கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியான விவகாரம்.. மனித உரிமைகள் ஆணையம் முக்கிய உத்தரவு
சென்னை: திருநெல்வேலி ஷாப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியான வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் 4 வாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி ஷாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் மூன்று மாணவர்கள் பலியானார்கள்.
இந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகியோர் மீது திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னரே மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டிடங்களில் தரம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications