பட்டப்பகலில் "பசுமை படுகொலை"... சென்னையில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு அகற்றம்-!
Recommended Video
சென்னை: சென்னை புறநகரில் சாலை விரிவாக்கத்துக்காக 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு அகற்றப்பட்டிருப்பது சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் 200 அடி சாலையில் ஏரிகள், பசுமையான மரங்கள் நூற்றுக்கணக்கில் இருந்தன. இந்த சாலையில் பயணிக்கும் போது சென்னையில் இப்படி ஒரு குளுமையான என வியக்க வைக்கும்.
அதுவும் அதிகாலை மற்றும் இரவு நேரப் பொழுதுகளில் பயணிக்கும் போது நாம் நெரிசல்மிக்க சென்னையில்தான் இருக்கிறோமா? என்கிற கேள்வியை எழுப்பும் அந்த குளுமை. ஆனால் இப்போது அத்தனையும் தொலைந்து போய்விட்டது.
இந்த 200 அடி சாலையும் பசுமையை கொன்று இயற்கையை சூறையாடிவிட்டது. இந்த 200 அடி சாலையில் இருபுறமும் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அத்தனையும் வெட்டி சாய்க்கப்பட்டு சாலை விரிவாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக இந்த சாலையில் மரங்கள் வெட்டப்பட்டதை கண்டு சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சொட்டு நீரும் கிடைக்காமல் சென்னை பட்ட அவதியின் துயரம் இன்னமும் காயவில்லை.
ஏரிகளை தொலைத்து வயல்களை தொலைத்து மரங்களை காவுகொடுத்து மிகப் பெரும் மாநகரமாக மாறி இருக்கும் சென்னை இப்போதுதான் கொல்லப்பட்ட அத்தனை இயற்கையின் வலிகளையும் உணர்ந்து கொண்டிருக்கிறது. அதே சென்னையில்தான் எஞ்சியிருந்த இயற்கை வளமும் விரிவாக்கம் என்ற பெயரில் வேட்டையாடப்பட்டிருக்கிறது.
என்று மாறுமோ பசுமை படுகொலை மோகம்?
நன்றி: ஒன் இந்தியா தமிழ் வாசகர் ஆர்.கே. கணேஷ்