ஸ்டாலின் ஒரு பக்கம் உருக்கம்! விஜய் மறுபக்கம் மாஸ்! 11 இடங்களுக்கு தவெக தூண்டில்? அப்ப திமுக கூட்டணி
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை பார்த்திராத ஒரு "தொங்கு சட்டசபை" சூழல் உருவாகியுள்ளது. 107 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான மேஜிக் நம்பரான 118-ஐ எட்ட தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது. இந்த இக்கட்டான நிலையில், 'ஆட்சியில் பங்கு" என்ற விஜய்யின் துருப்புச்சீட்டு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒருத்தரும் எதிர்பாராத ஒரு அரசியல் சூழலை தோற்றுவித்துள்ளன. அதிமுக அதிர்ச்சியில் உள்ளது.. முக்கிய தலைவர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது..

அதேபோல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்தத் தொகுதியான கொளத்தூருக்கு நேரில் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். தேர்தல் முடிவுகளில் பின்னடைவு ஏற்பட்ட போதிலும், தொகுதி மக்களைச் சந்தித்த முதல்வரின் இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
117-லிருந்து 107 ஆகக் குறையும் பலம்
ஒரு அரசு அமையத் தேவையான 118 இடங்களை எந்தப் பிரதானக் கட்சியும் எட்டாத நிலையில், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்கத் தேவையான பலத்தைப் பெறுவாரா அல்லது கூட்டணிக் கணக்குகள் தலைகீழாக மாறுமா என்ற விவாதம் அனல் பறக்கிறது.
தவெக ஆட்சியமைக்க இன்னும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், சட்டவிதிப்படி ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளதால் அக்கட்சியின் பலம் 107 ஆகக் குறையும் எனக் கணிக்கப்படுகிறது.
உடைகிறதா திமுக கூட்டணி?
இந்த சூழலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் நிலைப்பாடுதான் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. குறிப்பாக, "ஆட்சியில் பங்கு" என்ற விஜய்யின் அதிரடி அறிவிப்பு, பல ஆண்டுகளாக அதிகார பகிர்வுக்காகக் காத்திருக்கும் சிறிய கட்சிகளை தவெக பக்கம் ஈர்க்கும் துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு - விஜய்யின் மாஸ்டர் பிளான்
தவெக தரப்பில் இருந்து கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு வந்தால், அது குறித்து கட்சியின் மாநில மற்றும் செயற்குழுவைக் கூட்டி ஆலோசித்து முடிவெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுநாள் வரை திமுகவின் உறுதியான கூட்டணிக் கட்சிகளாக இருந்த சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள், தவெகவின் அழைப்புக்காகக் காத்திருப்பது போன்ற பிம்பத்தை இந்தப் பேச்சு உருவாக்கியுள்ளது. இதனால் திமுக கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, விசிக உள்ளிட்ட கட்சிகளும் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக எடப்பாடியின் மூவ் என்ன?
இன்னொருபக்கம், அதிமுகவின் நிலையும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பவானி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் இது குறித்து பேசும்போது, இளைஞர்களின் எதிர்பார்ப்பால் விஜய்க்கு வாக்குகள் கிடைத்துள்ளதை அங்கீகரித்துள்ளார்.
இருந்தாலும் விஜய்யுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு, "இது போன்ற பெரிய முடிவுகளைக் கட்சியின் பொதுச்செயலாளர் தான் எடுப்பார்" என மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். இது, அதிமுக இப்போதைக்கு அமைதி காத்தாலும், வரும் நாட்களில் அரசியல் லாப நஷ்டங்களைக் கணக்கிட்டு விஜய்க்கு ஆதரவு அளிக்கும் கதவுகளை முழுமையாக மூடிவிடவில்லை என்பதையே காட்டுகிறது.
நடந்து கொண்டிருக்கும் அரசியல் நகர்வுகளைக் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒன்று மட்டும் விளங்குகிறது.. தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாவதை மறுக்க முடியாது. நீண்டகாலமாக 2 துருவ அரசியலுக்குப் பழகிப்போன தமிழக மக்கள், இந்த முறை மாற்றத்தை விரும்பி வாக்குகளை சிதறடித்துள்ளனர்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 ஆலமரம் கட்சிகளுமே தங்களது வாக்கு வங்கியை தக்கவைக்க போராடும் நிலையில், விஜய்யின் வருகை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு பேரம் பேசும் வலிமையை கொடுத்துள்ளது. அதிகாரப் பகிர்வு என்ற ஒற்றை இலக்கு, பல வருட காலக் கொள்கை உறவுகளைக்கூடத் தகர்க்கும் வல்லமை கொண்டது என்பதை சிபிஎம் போன்ற கட்சிகளின் இப்போதைய "மென்மையான" போக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தொங்கு சட்டசபை சூழல்
தமிழகத்தின் அடுத்த 5 வருட ஆட்சி என்பது தனிநபர் செல்வாக்கை விட, பின்வாசல் பேச்சுவார்த்தைகளிலும் சரியான நேரத்தில் எடுக்கப்படும் கூட்டணிக் கட்சி மாற்றங்களிலுமே அடங்கியிருக்கிறது என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது..
விஜய் முன்வைக்கும் "ஆட்சியில் பங்கு" என்ற வாக்குறுதி உண்மையிலேயே கூட்டணிக் கட்சிகளை ஈர்த்து ஆட்சிப் பீடத்தில் அவரை அமர்த்துமா அல்லது திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணிகளைத் தக்கவைத்துத் தவெகவின் கனவைத் தவிடு பொடியாக்குமா என்பது அடுத்தடுத்து வரப்போகும் நாட்களில் தெரிந்துவிடும்.
தற்சயம் தமிழக அரசியல் ஒரு முதிர்ச்சியான, அதேசமயம் கணிக்க முடியாத ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.. விஜய்யின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்பதே தமிழக கூட்டணி அரசியலில் இப்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ...!!













Click it and Unblock the Notifications