இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி
ஹைதராபாத்: கடந்த சில தினங்களாகவே ஹைதராபாத்தைச் சேர்ந்த சூர்யா பாய் என்ற நபர், தான் கோடிக்கணக்கில் நகைகளை அணிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் திடீர் பிரபலமானார். இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அணிந்துள்ளதாக அவர் கூறிய நிலையில், அது வெறும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி நகைகள் என்பது வருமான வரித்துறையின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹைதராபாத்தில் "ஓல்டு சிட்டி கோல்டு மேன்" என்ற பெயரில் பிரபலமாக இருந்த சூர்யா பாய் என்ற நபர் தான் கலந்து கொள்ளும் பொதுநிகழ்ச்சிகளில் பெருமளவில் கழுத்து வலிக்க வலிக்க தங்க நகைகள் அணிந்து தோன்றினார். இதனால் சமூக வலைதளங்கள், யூடியூப் பேட்டிகள் மூலம் அவர் பிரபலமானார்.
தங்கம் விற்கும் விலைக்கு இவ்வளவு நகைகளா? என பலரும் ஆச்சர்யப்பட்டனர். இந்நிலையில் சூர்யா பாய் குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானாது. இதனிடையே சூர்யா குறித்து விசாரிக்க வேண்டுமென சிலர் ஐடியில் புகார் அளித்தனர்.

வருமானவரி துறை
இதனையடுத்து, வருமானவரி துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சூர்யா பாய் அணிந்திருந்த நகைகள் பெரும்பாலும் செம்பில் செய்யப்பட்டு, அதற்கு மேலாக தங்க பூச்சு அல்லது ரேடியம் பூச்சு பூசப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் அவர் தன்னிடம் இருந்த 12 நகைகள் ரூ.1 கோடி மதிப்புள்ளதாக கூறியிருந்தார். ஆனால் அதிகாரிகள் மதிப்பீடு செய்தபோது, அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் மட்டுமே என தெரியவந்துள்ளது.
சூர்யா பாய்
அதாவது அவர் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்ட 3 சவரன் மட்டுமே உண்மையான தங்கமாக இருந்தது. சில நகைகள் வெறும் செம்பு பொருட்களாகவும், ஒன்று மட்டும் வெள்ளியில் செய்யப்பட்டு அதற்கு தங்க பூச்சு பூசப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூர்யா பாய் தான் ஒரு மிகப் பெரும் செல்வந்தர் போல காட்டிக் கொள்ள சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தியதோடும், வெள்ளை நிற ஆடைகள் அணிந்து, பெரிய சங்கிலிகள், மோதிரங்கள், பிரேஸ் லெட் அணிந்து பொதுவாக நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.
கவரிங் நகைகள்
இந்நிலையில், அவர் அடிக்கடி நகைகளை மாற்றி அணிந்துள்ளார். சிலர் புதிய ஸ்டைல் என நினைத்த நிலையில், அந்த நகைகளின் பூச்சு விரைவாக மங்கிவிடுவதால் அவற்றை மாற்ற வேண்டியே புதிய கவரிங் நகைகள் வாங்கி அணிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தமாக குறைந்தது 32 போலி நகைகளை அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தியதாகவும் ஐடி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வருமானவரி தாக்கல்
மேலும், சூர்யா பாய் குறித்து நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் அவர் வருமானவரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் அவர் வருமானவரி தாக்கல் செய்திருந்தார். அதிலும் உடற்பயிற்சி மையம் நடத்துவது, கோழி கடை நடத்துவது மற்றும் பயிற்சியாளராக பணியாற்றுவது மூலம் சுமார் ரூ.4.9 லட்சம் வருமானம் ஈட்டியதாக தெரிவித்திருந்தார்.
ஹைதராபாத் கோல்ட் மேன்
மேலும் ஹைதராபாத் கோல்ட் மேன் சூர்யா பாய் பெயரிலும், மனைவி பெயரிலும் எந்த நிலையான சொத்துகளும் இல்லை என்றும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர் மாதம் ரூ.20,000 வாடகை செலுத்தி ஒரு குடியிருப்பில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் அவரது சொத்து விவரங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்து முழுமையான தகவல்களை பெற வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications