தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது... ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத்தை அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் மத்திய அரசு திணித்து வருவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் வணிக நோக்குடன் மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் வளம் குறித்து 32 இடங்களில் ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழகத்தின் வேளாண் மண்டலங்கள் பாலைவனங்களாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர்,
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என உறுதியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு நேர்மாறாக தற்போதைய அறிவிப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படாது என மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications