நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்
நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம் என்றும் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
இந்தியா இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்? மோடி கேள்வி
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அண்டை நாட்டுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின் படியும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் எங்கள் அரசு, இலங்கை அரசுடனான உறவுக்குச் சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும் சமத்துவம், நீதி, அமைதி, கவுரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும். இந்த உரையாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி,பொருளாதார உறவு ,சுற்றுலாத்துறை,கல்வி,கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம் என்றும் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.