கருணாநிதியை போலவே நானும் முதல்வரானேன்.. அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? முதல்வர் கேள்வி
சென்னை: அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி எப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அதேபோல தானும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இந்த முறை தேர்தலில் சந்திக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போக 179 இடங்களில் அதிமுக நேரடியாகக் களமிறங்குகிறது.

அதிமுகவில் ஐக்கியம்
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தருமபுரியில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தனது ஆதரவாளர்கள் 1000 பேருடன் அதிமுகவில் இணைந்தார்.

மூடு மந்திரமா?
தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மணி என்பவருக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வரானார் என்பது எனக்குத் தெரியும் என்று ஸ்டாலின் போகும் இடமெல்லாம் பேசி வருகிறார். இது அனைவருக்குமே தெரியும். இது என்ன மூடு மந்திரமா?

கருணாநிதியைப் போலவே
பெரும்பான்மையான அதிமுக சட்டசைபை உறுப்பினர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். இதன் காரணமாகவே நான் முதல்வரானேன். இதில் என்ன ரகசியம் இருக்கிறது. அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனாரோ, அதேபோலத் தான் நானும் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

கருணாநிதியை நம்பியா வாக்களித்தார்கள்
கருணாநிதி மட்டும் நேரடியாகவா வந்தார்? அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? கருணாநிதியை நம்பியா அனைவரும் வாக்களித்தார்கள்? அண்ணாவை நம்பியே அப்போது அனைவரும் வாக்களித்தார்கள். அவரது மறைவுக்குப் பின்னர் கருணாநிதி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல தான் நானும் ஜெயலலிதா மறைவுக்குப் பின் பெரும்பான்மையான சட்டசபை உறுப்பினர்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications