“கெஞ்சி கேட்டுக்குறேன்.. என் பின்னாடி வராதீங்க”.. தவெக தொண்டர்களிடம் கையெடுத்து கும்பிட்ட விஜய்!
வேலூர்: “கெஞ்சி கேட்டுக்குறேன்.. தயவுசெய்து யாரும் என் வண்டிக்கு பின்னாலோ அருகிலோ பைக்கில் பின் தொடர வேண்டாம்” என தவெகவினரிடம் தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய விஜய், தவெக உறுப்பினர்கள், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் இன்று நடைபெற்றது. அந்தச் சந்திப்புக்குப் பின்னர் தவெக நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார் விஜய். அதில், “எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. யாரை நம்பியும் ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

விஜய் பேசுகையில், “மக்களை நேசிக்கிற ஒரு சரியான தலைமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர். இன்று மக்களை நேசிக்கும் இயக்கமாக தவெக வந்துள்ளது. மக்களை அவரவர் ஊரில் வந்து பார்க்கவே விருப்பம். ஆனால் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களை சந்திக்க முடியவில்லை. நமது ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து மக்களை சந்திக்கிறேன்.
தற்போது நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத உங்கள் ஆட்சிக்கும் நடக்கும் போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். தீய சக்தி திமுக, தூய சக்தி தவெகவுக்கு இடையேயான போர். தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.க்குவுமான தேர்தல் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். இப்போது நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தலா, பிரதமர் பதவிக்கான தேர்தலா முதல்வர் சார்? எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என நம் மக்களுக்கு தெளிவாகத் தெரியும். தவெகவுக்கு எதிரி திமுக தான்.” எனப் பேசினார்.
வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி முடித்த விஜய், தவெக தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்தார். தான் போகும்போது, தன் வண்டியின் பின்னால், யாரும் வரவேண்டாம் என்று கூறினார். வேலூரில் இருந்து காரில் செல்வதாகவும், இதற்காக நான்கு மணி நேரம் ஆகும் என்பதால், தனது காரின் பின்னால், சைடில் பைக்கில் யாரும் வரவேண்டாம் என்றும், தயவு செய்து கெஞ்சி கேட்டுக்கொள்வதாகவும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சில நாட்களாக வெளியே தலைக்காட்டாமல் இருந்த தவெக தலைவர் விஜய், அதன்பிறகு புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு, அதனைத் தொடர்ந்து, ஈரோடு, சேலம் என கூட்டங்களில் பேசி வருகிறார். விஜய் வருகையின் போது ஏராளமான ரசிகர்கள் அவரது வாகனத்தைப் பின்தொடர்வதால் போக்குவரத்து பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
விஜய், ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு செல்லும்போது, அவரின் வாகனத்தின் பின்னால், பக்கவாட்டில் ரசிகர்கள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. இது கட்சிக்கும், விஜய்க்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் விஜய் இந்த வேண்டுகோளை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications