கிளி ஜோசியத்தை நம்பி அரசியல் செய்யவில்லை… ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொளேர்
சென்னை: சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ தான் அரசியல் செய்யவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

அதன்படி, தேனி மக்களவை தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அமமுக கட்சி சார்பில் தங்க தமிழ்ச்செல்வமும் போட்டியிடுகின்றனர். மிகவும் கவனிக்கப்படும் தொகுதியாக தேனி மாறி உள்ளது.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவர்களை நான் போட்டியாளர்களாக கருதவில்லை என்றார்.
என்னை பொறுத்தவரையில் நான் சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவன் அல்ல என்றும் கிளிஜோசியம் பார்த்து அரசியல் செய்பவன் அல்ல எனவும் தெரிவித்தார். மக்கள் குறைகள் என்னவென்று அறிந்து அதனைத் தீர்க்க முழு மூச்சோடு பாடுபடுவேன் என்றும் கூறினார்.
50 வருட அரசியலில் கறைபடியாத கரம் என பெயர் எடுத்து வைத்திருப்பவன் என்றும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரையே நேருக்கு நேர் எதிர்கொண்டதாகவும் கூறினார்.
தற்போதைய முதல்வர், துணை முதல்வரை கண்டு அஞ்சப்போவதில்லை. அவர்களை அவர்களிடத்திலேயே தோற்கடிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications